Business

பெட்ரோல் – டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்க திட்டம்: மே 1-ம் தேதி முதல் சோதனை

புதுடெல்லி:

இந்தியாவில் தற்போது பெட்ரோல் – டீசல் விலையை  நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை, இவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நடைமுறைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதாவது, சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மே 1-ம் தேதி முதல் 5 நகரங்களில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலையை மாற்றியமைக்க உள்ளது.

அதன்படி, புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் மே 1 முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதன்பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.