Business

ஜி.எஸ்.டி. துணை மசோதாக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

புதுடெல்லி:

நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஜி.எஸ்.டி.யில் 5% 12% 18% 28% என நான்கு அடுக்குகளாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மசோதா ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த சட்டத்தை அமலாக்குவதற்கு ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்கள் நிதி மசோதாக்களாக அறிமுகம் செய்யப்பட்டன. அதாவது, மத்திய சரக்கு-சேவை வரி மசோதா (சி.ஜி.எஸ்.டி.), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐ.ஜி.எஸ்.டி.), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யு.டி.ஜி.எஸ்.டி.) மற்றும் ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் மசோதா என 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த துணை மசோதாக்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 4 துணை மசோதாக்களுக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இத்தகவலை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்துவதற்கு வழி ஏற்பட்டுள்ளது.