History Indians Tamil Women Icon

தேவடிகளார் ‘விபச்சாரி’ ஆனது எப்படி? – மறைக்கப்பட்ட உண்மைகள்

கோயில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தான் தேவதாசிகள் என்றழைக்கப்படும் தேவடிகளார்கள். பக்தி இலக்கியம் கோலோச்சிய ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இவர்கள் சமூகத்தினரால் மரியாதையாகப் பார்க்கப்பட்டனர். காலப்போக்கில் அந்த மரபின் வழி வந்தவர்களுக்குப் போதிய அங்கீகாரமும் கவனிப்பும் இல்லாமல், தேவதாசிகள் என்பவர்கள் மிகக்கீழ்த்தரமாகச் சித்தரிக்கப்பட்டனர்.

தமிழ்க் கலாச்சாரத்துக்குச் செழுமை சேர்த்த ஒரு சமூக மரபு தன் சொந்த மண்ணில் இருந்து முற்றிலுமாக அழிந்து போனதன் பின்னணி

தமிழர் இசைகள், நடனங்கள் எல்லாம் கற்று தேர்ந்து அதை வாழையடி வாழையாக அழியாமல் பின்பற்றி வந்தவர்கள் தேவடிகளார். ஆனால்,
எந்த ஒரு உன்னதமான நிறுவனமும் கூட, சமூக விரோதிகள் அதனுள் சுதந்திரமாக ஊடாட அனுமதிக்கப்படும் பட்சத்தில் உருச்சிதைந்து, மிக மோசமான ஒரு நிறுவனமாகச் சீரழிந்து போய்விடும் என்ற உண்மையை தேவதாசி முறையின் அழிவு உணர்த்துகிறது.

தேவடிகளாரின் கடமை என்ன?

பாடல்கள் இசைப்பதும், நடனமாடுவதும்தான் கோயில்களில் அவர்களின் பொதுவான கடமைகளாக இருந்தன.

செல்வத்தை கொள்ளையடித்தல், கிறித்துவத்தைப் பரப்புதல், மக்களைக் கூலியாளிகளாக்குதல் போன்ற கொள்கைகளோடு பிரிட்டிஷ்காரர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தனர். அதனால், தமிழர் மரபுகள் எல்லாம் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் தேவடிகளார் முறை. தேவடிகளாரை காசுக்காக தெருவில் ஆடும் கீழ்த்தரமான பெண்கள் என கருதினர்.

சோழர் காலத்தில் தேவடிகளார்?

தேவடிகளார் என்பவர் ஆண்களும் பெண்களும், இறை தொண்டுக்காகவும் கலை தொண்டுக்காகவும் சமூக சேவைக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஆவர். தஞ்சாவூர் பெரிய கோவிலில், 400 தேவடிகளார் (ஆண்கள் பெண்கள், இசையாளர், நடனக் கலைஞர்கள் போன்றோர்) சோழர் காலத்தில் இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

நட்டுவானர்கள் எனப்படுபவர்கள் தேவடிகளார்க ஆடுவதற்கு இசையமைப்பவர்கள் ஆவர். ஆகம முறைப்படி கோவில்களில் பாட்டும் நடனமும் தேவையான ஒன்று. ஆட்டமும் பாட்டமும் உள்ளக் களிப்பை ஏற்படுத்தும். மேலும், அவை தான் ஒரு இனத்தின் அடையாளம். அந்த அடையாளத்தைப் பேணி காத்து வந்தவர்கள் தான் தேவடிகளர்.

பிரிட்டிஷ்காரர்களின் சதி

1882-ஆம் ஆண்டு கிறித்துவ சமயத்தைப் பரப்புபவர்கள் தேவடிகளார் மரபை விபச்சாரிகள் என்றும், சமூகத்தின் பேய்கள் என்றும் முத்திரை குத்தினர். கோயில்களில் நடக்கும் பாட்டுக் கச்சேரிகள் எல்லாம் தடை செய்யபட்டன. உண்மையில், இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களால் நிறைய விபச்சார விடுதிகள் நடத்தப்பட்டதன் ஆதரங்கள் வெளிப்படையாக உள்ளன. இதனால், நிறைய பிரிட்டிஷ் அதிகாரிகள் கடுமையான நோய்களுக்கு உள்ளாகினர். இதற்கு காரணம் தேவடிகளார் என்றே குற்றம்சாட்டினர்.

இதனால், பிரிட்டிஷ்காரர்கள் தேவடிகளார்களை பல கொடுமைகள் செய்து துன்புறுத்தி விபச்சாரிகள் என்று பதிவு செய்ய வைத்தனர். தேவடிகளார்களுக்கு நோய் இருப்பதாகக் கூறி, அவர்களைக் கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகக் கூறி இழுத்து சென்றனர். அதோடு, அந்த தேவடிகளார்கள் காணாமல் போனார்கள். அவர்களின் குடும்பத்தார் கண்ணில் படவே இல்லை.

தேவடிகளார் சமூக சேவகம் செய்தார்கள்?

தேவதாசிகள், பொதுமக்களுக்கான சமூக சேவைகளை மேற்கொண்டனர் என்று சாசனங்கள் பதிவு செய்துள்ளன. விண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டுதோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன. இரண்டு தேவதாசிகளான நாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகியோர் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறுபயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளனர். அன்னநாடு என்ற இடத்தில் அவர்கள் திருந்திகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தைத் தோண்டி ஆழப்படுத்தி, கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர்.

திருவிழாக்களிலும், இறை காரியங்களிலும் தேவடிகளாரின் வருகை மிகவும் உன்னதமாகக் கருதபட்டது. அவர்களின் பிள்ளைகள் சமூகத்தில் உயர்வாகப் போற்றப்பட்டனர். ஆனால், இப்பொழுது அவர்களின் நிலை முற்றிலும் தப்பான ஒன்றாகி விட்டது. விபச்சாரம் செய்பவர்கள் தேவடிகளார் என்று மாறிவிட்டது. இன்றைய நிலையில் தேவடிகளார் மரபு அழிந்து விட்டது என்றாலும், அவர்களின் புகழ் மறைந்து அவர்கள் கீழ்த்தரமானவர்கள் என்றே அறியப்படுகின்றனர்.

விபச்சாரிகளை தேவடியாள் (தேவடிகளார் என்ற சொல்லின் திரிபு) என்று அழைக்கின்றனர். தமிழர் கலையைக் கட்டி காத்த இந்த பெண்கள் பிரிட்டிஷ் காரர்களின் கொடுமையால் அழிந்தனர். அவர்கள் புகழும் அழிந்து விட்டது.