Indians

நூறு பெண்களிடம் காதல் நாடகம் நடத்திய வாலிபர் கைது

பெங்களூர்: பத்து வருடங்களாக 100 பெண்களிடம் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பணம் மற்றும் நகைகளைச் சுருட்டிச் சென்ற ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நூறு பெண்களிடம் காதலிப்பது போல் பழகி நாடகமாடி பணம் நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற இளைஞரை இன்று அம்மாநில காவல்துறை கைது செய்தது.

28 வயதான சதாக் முஷ்தக் என்ற அந்த இளைஞர் பெண்களிடம் உயர் பதவியில் இருப்பவர் போல் காட்டிக்கொண்டு பழகி, காதலிப்பது போல் நாடகமாடி, அவர்களுடைய மனதில் இடம்பிடித்த பின் அவசரத் தேவை என்று கூறிய பணம் மற்றும் நகைகளை அபகறித்துக்கொண்டு மாயமாகிவிடுவதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுவரை எந்த பெண்ணும் சதாக் பற்றி புகார் அளிக்க முன்வராத நிலையில் பெங்களூரில் உள்ள பகலூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுத்திருக்கிறார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சதாக்கை பிடித்துள்ளனர்.

சுமார் 75 முதல் 100 பெண்களிடம் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இதே போல நாடகமாடி அவர்களது பணம் மற்றும் நகைகளைப் பறித்ததுடன் பலரை பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கியுள்ளான் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.