Life History இசைக்கலைஞர்கள்

எம். எஸ். சுப்புலக்ஷ்மி

இசைப் பேராசரி’ என அனைவராலும் புகழப்பட்ட எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகியாவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, குஜராத்தி போன்ற பலமொழிகளில் பாடியிருக்கிறார். இவர் ஒரு பாடகராக மட்டுமல்லாமல், நடிகையாகவும் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன், மற்றும் பல விருதுகளைப் பெற்று ஒரு மாபெரும் கர்நாடக சங்கீத மேதையாக விளங்கிய எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 16, 1916

இடம்: மதுரை, தமிழ்நாடு (இந்தியா)

பணி: கர்நாடக இசைப் பாடகி

இறப்பு: டிசம்பர் 11, 2004

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், 1916  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரை மாவட்டத்தில் சுப்பிரமணி அய்யருக்கும், சண்முகவடிவு அம்மாளுக்கும் மகளாக ஒரு இசை ஆர்வம் மிக்க குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பாட்டி வயலின் வாசிப்பவராகவும், தாய் சண்முகவடிவு வீணை மீட்டுவதிலும், பாடுவதிலும் புகழ்பெற்று விளங்கினார். இவருக்கு சக்திவேல் என்ற சகோதரரும், வடிவாம்பாள் என்ற சகோதரியும் இருந்தனர்.

ஆரம்ப வாழ்க்கை:

இசைப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், சிறுவயதிலிருந்தே சுப்புலக்ஷ்மி அவர்களுக்கு இசையில் அதிக ஆர்வம் இருந்தது. கர்நாடக இசையில் புகழ்பெற்று விளங்கிய “செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம்” கர்நாடக சங்கீதம் கற்கத் தொடங்கிய சுப்புலக்ஷ்மி அவர்கள், “பண்டிட் நாராயணராவ் வியாஸ்” என்பவரின் கீழ் இந்துஸ்தானி இசையையும் கற்றார். பின்னர், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கும் கற்கத் தொடங்கினார். தன்னுடைய தாயாருடன் பல கச்சேரிகளில் பங்குபெற்ற அவர், செம்மை வைத்தியநாத பாகவதர், காரைக்குடி சாம்பசிவா ஐயர், பாலக்காடு டி.எஸ். மணி ஐயர் போன்றவர்களின் இசை கச்சேரிகளுக்கும் தன் தாயாருடன் நேரில் சென்று ரசித்தார்.

சுப்புலக்ஷ்மியின் இசைப் பயணம்:

இசையுலகினரால் ‘எம்.எஸ்’ என அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களுக்கு முதல் குரு அவரது தாயார்தான். தன்னுடைய தாயாருடன் அவ்வப்போது இசைக் கச்சேரிகளில் பாடிவந்த சுப்புலக்ஷ்மி அவர்கள், 1926 ஆம் ஆண்டு அவருடைய தாயாரின் வீணை இசையில் இவரின் பாடலும் இணைந்து முதல் இசைத்தட்டு வெளிவந்தது. பின்னர், 1929ல் இவருடைய முதல் கச்சேரி “சென்னை மியூசிக் அகாடமியில்” அரங்கேறியது. அதன் பிறகு பல கச்சேரிகள் நடைபெற்றன. தன்னுடைய இனிமையான குரலால் அனைவரையும் தன்வசபடுத்திய சுப்புலக்ஷ்மி அவர்கள், தென்னிந்தியாவில் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகராக வலம்வந்தார். ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’, ‘ஒளிப்படைத்த கண்ணினாய் வா வா வா’, ‘வாழிய செந்தமிழ்’ போன்ற பாடல்கள் இவருடைய குரலில் மிகவும் பிரபலமானவையாகும்.

1966 ஆம் ஆண்டு, ஐ.நா சபையில் உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய “மே தி லார்ட் ஃபார்கிவ் அவர் சின்ஸ்” என்ற ஆங்கிலப் பாடலை எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். ‘வெங்கடேச சுப்ரபாதம்’, ‘ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்’, ‘ரங்கபுர விஹாரா’ என்னும் கீர்த்தனை போன்றவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய சிறந்த பாடல்கள் ஆகும்.

திரைப்பட வாழ்க்கை:

1938 ஆம் ஆண்டு, கே. சுப்பரமணியம் இயக்கத்தில் “சேவாசதனம்” என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமான எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், அப்படத்தில் பாடியும், நடித்தும் இருப்பார். பின்னர், ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த “சகுந்தலை” என்ற திரைப்படம், எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 1941ல் வெளியான “சாவித்திரி” என்ற திரைப்படத்தில் நாரதராக நடித்து மேலும் பாராட்டைப் பெற்றார்.

எல்லியஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த “மீரா” திரைப்படம் எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது எனலாம். இந்தப் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. எம்.எஸ். பாடிய “காற்றினிலே வரும் கீதம்”, “பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த”, “கிரிதர கோபாலா”, “எனது உள்ளமே” போன்ற பாடல்கள் கேட்பவர்களை உருகவைத்தது எனலாம். இந்தப் படம், பின்னர் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

திருமண வாழ்க்கை:

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், ‘சகுந்தலை’ படத்தை தயாரித்த கல்கி சதாசிவம் என்பவரை 1940 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள திருநீர்மலை மலைக் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். சதாசிவம் ஒரு இசை ப்ரியராக மட்டுமல்லாமல், இசைக் கற்றவராகாவும் இருந்தார்.

இறுதி காலம்:

1997 ஆம் ஆண்டு, சதாசிவம் மரணம் அடைந்தபிறகு கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்ட எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், 1997 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடெமியில் பாடினார். இதுவே, அவருடைய கடைசி கச்சேரியாகவும் அமைந்தது. பின்னர், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி தன்னுடைய 88வது வயதில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மரணம் அடைந்தார்.

விருதுகள்:

  • 1954 ஆம் ஆண்டு இந்திய அரசின் மூன்றாவது மிக உயரிய விருதான “பத்ம பூஷன்” வழங்கப்பட்டது.
  • 1967 ஆம் ஆண்டு “ரவீந்திர பாரதி கலாச்சார அகாடமி விருது” வழங்கப்பட்டது.
  • 1968 ஆம் ஆண்டு “சென்னை ம்யூசிக் அகாடெமி” மூலம் “சங்கீத கலாநிதி விருது” வழங்கப்பட்டது.
  • 1970 ஆம் ஆண்டு “சென்னை தமிழ் இசை சங்கம்” இவருக்கு இசை பேரரிஞர் விருது வழங்கியது.
  • 1974 ஆம் ஆண்டு ஆசியாவின் ‘நோபல் பரிசு’ என அழைக்கப்படும் “மக்செசே விருது” ரமன் மக்செசே விருது நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
  • 1975 ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது.
  • 1988 ஆம் ஆண்டு “காளிதாச சன்மான் விருது” மத்திய பிரதேச அரசால் வழங்கப்பட்டது.
  • 1990 ஆம் ஆண்டு “நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது” வழங்கப்பட்டது.
  • 1996 ஆம் ஆண்டு “கலாரத்னா” விருது வழங்கப்பட்டது.
  • 1998 ஆம் ஆண்டு இந்திய அரசின் முதலாவது மிக உயரிய விருதுதான “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
  • 2004 ஆம் ஆண்டு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.

கர்நாடக இசையுலகின் பேரரசியாக விளங்கிய எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின்  இசை கீதங்கள் என்றென்றைக்கும் கேட்பவர்களை ஒரு கணம் மறக்க வைக்கும். தேனினும் இனிய காந்த குரலால் கோடானுக்கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பெற்ற எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், இந்திய நாட்டிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷமாவார். தான் பாடி ஈட்டிய பெரும் செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒரே இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி என்றால் அது மிகையாகாது!!