Life History விளையாட்டு வீரர்கள்

பி. டி. உஷா

பி. டி. உஷா, கேரளாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற இந்திய தடகள வீராங்கனை ஆவார். 1985 மற்றும் 1986  ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டளர்களில் ஒருவராக விளங்கியவர்.

இந்த சாதனையை இதற்கு முன்பும், இதற்கு பின்பும் வேறு எந்த இந்தியரும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. சர்வதேச அரங்கில் தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த இவரை “இந்திய தடகளங்களின் அரசி” எனவும், ‘இந்தியாவின் தங்க மங்கை’ எனவும், “பய்யொலி எக்ஸ்பிரஸ்” எனவும் வர்ணிக்கப்படுகிறார். தனது அதிவேக ஓட்டத்தின் மூலம் விளையாட்டுத் துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, இந்தியத் தடகள விளையாட்டுகளில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராக கருதப்படும் பி. டி. உஷா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூன் 27, 1964

இடம்: பய்யோலி (கோழிக்கோடு மாவட்டம்), கேரளா மாநிலம், இந்தியா

பணி: தடகள விளையாட்டு விராங்கனை.

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

பி. டி. உஷா என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் “பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா” அவர்கள், 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள “பய்யோலி” என்ற இடத்தில் பைத்தல் என்பவருக்கும், இலட்சுக்கும் மகளாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சிறுவயதிலேயே விளையாட்டில் ஆர்வம் மிக்கவராக விளங்கிய அவர், தன்னுடைய பள்ளியில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்வார். அதேபோல் 1976 ஆம் ஆண்டு கேரளா மாநில அரசு, கண்ணூரில் பெண்களுக்கான விளையாட்டுப் பள்ளியைத் தொடங்கியது. அதில் கோழிக்கோடு மாவட்டத்தின் சார்பில் இவர் தெடுக்கப்பட்டார்.

தேசிய அளவில் அவரின் சாதனைகள்

தடகள விளையாட்டில் புயல் வேகத் திறமையினை வளர்த்துக்கொண்டு வந்த அவர்,  முதன் முதலாக 1977 ஆம் ஆண்டு தன்னுடைய 13 வயதில் தேசிய அளவிலான தடகள விளையாட்டில் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு, தன்னுடைய முதல் தேசிய சாதனையைப் படைத்தார். பிறகு, தொடர்ந்து பல தேசிய போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றதோடு மட்டுமல்லாமல், அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

சர்வதேச அளவில் அவரின் சாதனைகள்

தேசிய அளவில் பல தடகளப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களையும், பலருடைய பாரட்டுகளையும் வென்ற அவர், பின்னர் சர்வதேச அளவில் கால் பதிக்கத் தயாரானார். 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக சர்வதேச அளவில் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் பங்கேற்று, பதக்க வாய்ப்பை இழந்தாலும், அதன் பிறகு 1982 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதுவே அவருடைய முதல் சர்வதேச பதக்கமாகும். பின்னர் குவைத்தில் நடைபெற்ற சாம்பியன் தடகளப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில், ‘தங்கம்’ வென்று புதிய சாதனைப் படைத்தார். அதன் பிறகு, 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 23வது ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் தடை ஓட்டத்தில், அரையிறுதியில் முதலாவதாக வந்தாலும், இறுதி ஓட்டத்தில் 100ல் ஒரு நொடி வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இருந்தாலும், ஒலிம்பிக் போட்டியில் இறுதிபோட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய விராங்கனை என்ற சிறப்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டப்பந்தயத்தில் அவரே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். 1986ல் சியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் என அனைத்திலும் முழு ஆதிக்கம் செலுத்தி, தங்கம் வென்றதோடு மட்டுமல்லாமல், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று வெற்றிவாகை சூட்டினார். இச்சாதனையைப் பாராட்டி, மத்திய அரசு அவரை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கியது. அதன் பிறகு, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கொடிகட்டிப் பறந்த அவர்களுக்கு “ஆசிய தடகள ராணி” எனப் பட்டம் சூட்டப்பட்டது. 1983 முதல் 1989 வரையிலான ஆண்டுகளில் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்ற அவர்,  சுமார் 13 தங்கப் பதக்கங்களை வென்றார்.

இல்லற வாழ்க்கை

சுமார் 28 வயதுவரை விளையாட்டு மட்டுமே வாழ்க்கைத் துணை என்று பயணித்த பி. டி. உஷா அவர்கள், 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாள் மலப்புரம் மாவட்டத்தில் வசித்துவந்த சீனிவாசன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சீனிவாசன் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

திருமணத்திற்குப் பிறகு

திருமணத்திற்குப் பிறகு, சுமார் 3 ஆண்டுகள் விளையாட்டில் பங்கேற்காமல் இருந்த அவர், தன்னுடைய கணவர் அளித்த ஊக்கத்தின் காரணமாக மீண்டும் போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார். 1998 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்று, 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் ‘வெண்கலப் பதக்கம்’ வென்றார். ஆசியப் போட்டிகளில் மட்டும் 30 பதக்கங்களை வென்ற பி. டி. உஷா அவர்கள், அதுவரை அவர் பங்கேற்ற சர்வதேச போட்டிகள் மூலம் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார்.

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு

காலில் தொடர்ந்து அவருக்கு வலி ஏற்பட்டதன் காரணமாக, ஓய்வு எடுத்துகொள்ள முடிவு செய்த அவர், ஜூலை 25, 2000-ல் தனது 36வது வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சுமார் 20 ஆண்டுகளாகத் தடகளப் போட்டிகளில் பங்கேற்று, பல சாதனைகளைப் படைத்து, இந்திய விளையாட்டுத் துறைக்கு அறிய பங்காற்றிய அவரை கௌரவிக்கும் வகையில், இந்திய அரசு அவருக்கு “பத்மஸ்ரீ” மற்றும் “அர்ஜுனா” விருதுகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய ரயில்வே துறையில் அதிகாரி அளவிலான பணியையும் வழங்கி கௌரவித்தது.

விருதுகளும், மரியாதைகளும்

  • 1984 – மத்திய அரசிடம் இருந்து “அர்ஜுனா விருது”
  • 1984 – இந்திய அரசிடம் இருந்து “பத்மஸ்ரீ விருது”
  • 1985 – ஜகார்த்தா ஆசிய தடகள மீட் மூலம் ‘சிறந்த பெண் தடகள விராங்கனைக்கான விருது’.
  • 1984,1985,1986,1987 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளுக்கான ‘சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான ஆசியா விருது’.
  • 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளுக்கான ‘சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைக்கான உலகக்கோப்பை’ வழங்கப்பட்டது.
  • 1986 – சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் மூலம் ‘சிறந்த தடகள விளையாட்டு விராங்கனைக்கான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது’.
  • 1999 – ‘கேரள விளையாட்டு பத்திரிக்கையாளர் விருது