Flash News Tamil

சென்னைக்கு வந்தபோது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த அதிகாரி மனைவி பலி

மணப்பாறை,

நள்ளிரவில் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த அதிகாரி மனைவி பலியானார்.

அதிகாரி மனைவி

தூத்துக்குடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா (வயது 34). இவர் நேற்று முன்தினம் மாலை சென்னை செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணம் செய்தார்.

நள்ளிரவு ரெயில் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மாதம்பட்டி என்ற இடத்தில் சென்ற போது திடீரென்று பிரியா ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் பிரியா விழுந்தது யாருக்கும் தெரியவில்லை.

யாரும் தள்ளி விட்டனரா?

இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக கால்நடைகளை மேய்க்க சென்றவர்கள் பார்த்தபோது பிரியா இறந்து கிடந்ததை பார்த்து மணப்பாறை ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ரெயில் நிலைய அதிகாரிகள் இதுகுறித்து திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து போன பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரியா ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு யாரேனும் அவரை கீழே தள்ளி விட்டார்களா? என்பது குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.