Cinema Entertainment Flash News Tamil

வருகிற தேர்தலில் ‘‘மீண்டும் அரசியலில் ஈடுபட திட்டமா?’’ நடிகர் வடிவேல் பரபரப்பு பேட்டி…!!!

‘‘வருகிற தேர்தலில் மீண்டும் அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறதா?’’, என்ற கேள்விக்கு நடிகர் வடிவேல் பதிலளித்தார். ‘‘என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’’, என்று அவர் கூறினார்.

‘எலி’

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’ ஆகிய படங்களை தொடர்ந்து வடிவேல் கதாநாயகனாக நடித்திருக்கும் 4-வது படம், ‘எலி’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சதா நடித்திருக்கிறார். யுவராஜ் தயாளன் டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் வடிவேல் கலந்துகொண்டு நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திட்டு

சமீபகாலமாக நான் எங்கே சென்றாலும், ‘‘நீ ஏன் படத்தில் நடிக்கவில்லை?’’ என்று கேட்டு ஜனங்கள் என்னை திட்டுகிறார்கள். அவர்கள் கெட்ட வார்த்தையால் திட்டாத குறைதான். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி? என்று கேட்கிறார்கள்.

அந்த சமயத்தில் தான் டைரக்டர் யுவராஜ் தயாளன் என்னிடம் வந்து ‘எலி’ படத்தின் கதையை சொன்னார். அதில் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறோம். குழந்தைகளுடன், குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கும் வகையில் படம் இருக்கும்.

அடுத்த படம்

இந்த படத்தை அடுத்து ஒரு புதிய படத்தில் நான் முதல்-அமைச்சர் வேடத்தில் நடிக்கிறேன். 10 டைரக்டர்களிடம் கதை கேட்டிருக்கிறேன். ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் படி என்னை அழைத்தால், நிச்சயமாக நடிப்பேன்

இவ்வாறு வடிவேல் கூறினார்.

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றிற்கு வடிவேல் அளித்த பதில்களும் வருமாறு:-

ஒரு தலை காதல்

கேள்வி:- இந்த படத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றி சொல்லுங்கள்?

பதில்:- படத்தில் நான் எலியாக நடிக்கிறேன். சதா மீது ஒரு தலை காதல் கொண்டவனாக வருகிறேன். கதாநாயகிகளுடன் நம்மால் அப்படித்தானே நடிக்க முடியும்?

கேள்வி:- நகைச்சுவை நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் தயங்குகிறார்களாமே?

பதில்:- கேள்வியே அசிங்கமாக இருக்கிறது. கதாநாயகிகளை அழைப்பது கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்த அல்ல. கதைக்கு தேவைப்படுவதால் தான் கதாநாயகிகளை அழைக்கிறோம். நடிக்க மாட்டேன் என்று சொன்னால், வேறொரு கதாநாயகியை அழைப்பார்கள்.

எலி-புலி

கேள்வி:- ‘எலி’யும், ‘புலி’யும் ஒரே தேதியில் மோதுமா?

பதில்:- நீங்களே முடிச்சு போட்டு ஒரு வழி செய்துவிடுவீர்கள் போல… கதாநாயகர்கள் எல்லாம் ‘சிக்ஸ்-பேக்’குடன் நடிக்கிறார்கள். நமக்கு ‘சிங்கிள் பேக்’ தான். நான் அர்னால்டு அல்ல. எனக்கு என்ன முடியுமோ, அதைத்தான் நான் செய்கிறேன். யாருக்கும் நான் போட்டி அல்ல. இனிமேல் மற்ற கதாநாயகர்களின் படங்களில் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.

மீண்டும் அரசியலா?

கேள்வி:- வருகிற தேர்தலில் அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறதா?

பதில்:- என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ‘எலி’ எங்கே தாவும்? என்று யாருக்கும் தெரியாது.

மேற்கண்டவாறு வடிவேல் பதிலளித்தார். பேட்டியின் போது, டைரக்டர் யுவராஜ் தயாளன், பட அதிபர்கள் சதீஷ்குமார், அமர்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.