Flash

ஜெயலலிதா தமிழ் புத்தாண்டு வாழ்த்து

தமிழக மக்களுக்கு ஏற்ற மிகு வளர்ச்சியையும், குறையாத மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக தமிழ் புத்தாண்டு விளங் கட்டும்’ என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து கூறியுள்ளார்.

ஜெயலலிதா வாழ்த்து

தமிழ் புத்தாண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் என அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ‘தமிழ் புத்தாண்டு’ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

‘‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு, அமிழ்தம் அவனுடைய வழியாகும், அன்பே அவனுடைய மொழியாகும்’’ என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கருத்திற்கிணங்க, தொன்மையினும், பன்முகத்தன்மையிலும், ஈடு இணையில்லா பண்பாட்டு பெருமை கொண்ட தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு நாளாக உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

உறுதி ஏற்போம்

தொன்றுதொட்டு இருந்து வந்த இந்த நடைமுறை மாற்றப்பட்டதை சரி செய்து, முன்னோர் வகுத்த வழிமுறையின்படி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு திருநாளாய் தொடரும் என்பதை மீண்டும் நிலைநாட்டியதை நினைவுக் கூர்வதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழக மக்களின் உள்ளத்திலும், எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்திடும் இந்த புத்தாண்டில் நாம் அனைவரும் ஒருமித்து உழைத்து, தடைகளை தகர்த்து, புதிய சாதனைகளை படைத்து, வளமிக்க தமிழகத்தை உருவாக்கிட உறுதி ஏற்போம்.

வளர்ச்சி, மகிழ்ச்சி, எழுச்சி

இந்த புத்தாண்டு தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சியையும், என்றும் குறையாத மகிழ்ச்சியையும், நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியையும் வழங்கும் ஆண்டாக விளங்கட்டும் என்று வாழ்த்தி, உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த ‘தமிழ் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.