News தற்போதைய செய்தி

நாடு முழுவதும் 8-ந் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: தென் மாநிலங்களில் 6-வது நாளாக நீடிப்பு

சேலம்:

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30-ந் தேதி முதல் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் போராட்டத்தை முடிவு கொண்டு வரும் வகையில் நேற்று சென்னையில் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த பேச்சு வார்த்தையில் 70 கிலோ மீட்டர் கீழ் செல்லும் வாகனங்களுக்கு வேக கட்டுபாட்டு கருவி பொருத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வாட்வரி குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உயர்த்தப்பட்ட கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. தாமதமாக எப்.சி காட்டினால் ரூ.50-ல் இருந்து ரூ.20 ஆகவும், புதிய வாகன பதிவுக்கு ரூ.1500-ல் இருந்து ரூ.1000-ஆக கட்டணங்கள் குறைக்கப்பட்டன.

ஆனால், மத்திய அரசு உறுதியளித்த இன்சூரன்ஸ் பிரீமியம் தொடர்பாக இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து உள்ளது. மீண்டும் இன்று டெல்லியில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

அதில் சுமூக முடிவு வரும் வரை போராட்டம் தொடரும் என்று லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இதனால் 6-வது நாளாக இன்றும் 6 மாநிலங்களிலும் லாரி ஸ்டிரைக் நீடித்தது.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. தென் மாநிலங்களில் தொடர்ந்த இந்த போராட்டத்தால் 36 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில் மட்டுமே ரூ.8 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள சரக்குகளும், சேலம் மாவட்டத்தில் ரூ.1200 கோடி மதிப்புள்ள சரக்கு தேக்கமும் இதில் அடங்கும்.

இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு தலைவர் குமாரசாமி கூறுகையில்:

தமிழக அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்சூரன்ஸ் தொடர்பாக இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம் நடத்திய பேச்சு வார்த்தையில் பிரீமியம் கட்டணத்தை குறைக்காததால் சுமூக முடிவு ஏற்படவில்லை.

இதனால் 6 மாநிலங்களிலும் போராட்டம் தொடர்கிறது. மேலும், வருகிற 20-ந் தேதி முதல் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது வருகிற 8-ந் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது. மத்திய அரசு இன்சூரன்ஸ் பிரீமியம் தொடர்பான பிரச்சினையில் சரியான முடிவு எடுக்காவிட்டால், வருகிற 8-ந் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் ஓடாது. எனவே மத்திய அரசு இதில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.