political

உ.பி.யில் ஒரு நிஜ மோக்லி? காட்டில் மீட்கப்பட்ட சிறுமி விலங்குகள் போன்று நடந்துகொள்கிறார்

 லக்னோ:

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஜங்கிள் புக் திரைப்படத்தில் வரும் மோக்லி என்ற சிறுவன், காட்டில் விலங்குகளோடு சேர்ந்து செய்யும் செயல்கள் வியப்பில் ஆழ்த்தும். அதேபோன்ற செயல்களுடன் ஒரு சிறுமி உ.பி. காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பராய்ச் மாவட்டம் காதர்நியாகாட் வனப்பகுதியில் இரு மாதங்களுக்கு முன்னர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 8 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். அந்த சிறுமியின் நடவடிக்கையானது விலங்குகளை போன்று காணப்பட்டதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில தலைமை மருத்துவ அதிகாரி டிகே சிங் பேசுகையில், ‘இரு மாதங்களுக்கு முன்னதாக சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள். அந்த சிறுமி விலங்குகளை போன்று சாப்பிடுகிறாள். நடக்கிறாள், விலங்குகளை போன்றே ஓடுகிறாள், மனிதர்களை கண்டு விலகுகிறாள். அவள் தோலில் அடிபட்டதற்கான காயங்கள் உள்ளன’ என்று கூறியுள்ளார்.

சிறுமிக்கு நடப்பதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இருந்தாலும் விலங்குகளை போன்றே கை கால்களை பயன்படுத்துவதாகவும் அவளை கவனித்து வரும் டாக்டர்கள் கூறுகின்றனர். அதேசமயம், அவளால் பேசவோ எழுதவோ முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.