political

தி.நகரில் இன்று காலை தீபா – கணவர் மாதவன் ஆதரவாளர்கள் மோதல்

சென்னை:

தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபா வீட்டு முன்பு இன்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாடுகள் இன்று காலையில் செய்யப்பட்டிருந்தன.

அம்பேத்கர் படத்துக்கு தீபாவும், மாதவனும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாதவன் அ.தி.மு.க.கரை வேட்டி கட்டியிருந்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி தீபா மற்றும் மாதவனின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.

அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டு இருவரும் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். இதன் பின்னர் வெளியில் நின்று கொண்டிருந்த தீபா மற்றும் மாதவன் ஆதரவாளர்களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைகலப்பும் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். இருப்பினும் தீபா மற்றும் மாதவன் ஆதரவாளர்கள் அங்கிருந்து செல்லாமலேயே கூடியிருந்தனர். அப்போது ஒரு சிலர், தீபாவும் மாதவனும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தீபாவுக்கு எதிராக கோ‌ஷங்களும் எழுப்பப்பட்டன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இரு வரும் சில நாட்கள் பிரிந்திருந்தனர்.

இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு இருவரும் ஒன்று சேர்ந்தனர். இந்த நிலையில் தீபா, மாதவன் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது தீபா பேரவையில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.