political

பள்ளி வளர்ச்சி நிதியில் அ.தி.மு.க.வினர் ஊழல்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அறம் மற்றும் நன்னெறியை கற்றுத்தர வேண்டிய பள்ளிக்கூடங்கள் ஊழலின் உறைவிடமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியை ஆளுங் கட்சியினரும், அதிகாரிகளும் கூட்டணி அமைத்து கொள்ளையடிப்பது பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் மூலம் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் கல்வி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வசதியாக ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.50,000 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆனால், இந்த நிதி கட்டுப்பாடற்ற முறையில் அதிகாரிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு நெருக்கமான நிறுவனத்தில் இருந்து அனைத்துப் பள்ளிகளுக்கும் விஞ்ஞானப் பொருட்கள் என்ற பெயரில் ஒரு பெட்டி அனுப்பப்படும். அந்தப் பெட்டியில் எதற்கும் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே இருக்கும்.

அவற்றின் மொத்த மதிப்பு சில நூறு ரூபாய்களைத் தாண்டாது. ஆனால், அவை உலகத்தரம் வாய்ந்தவை என்றும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தவிர்க்க முடியாத அப்பொருட்களின் மதிப்பு ரூ.25,000 என்றும் கூறி முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் தகவல் அனுப்பப்படும்.

அதையேற்று அனைத்து பள்ளிகளிலும் உள்ள பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழுவின் நிதியிலிருந்து விஞ்ஞான பொருட்களை வழங்கிய நிறுவனத்திற்கு தலா ரூ.25,000 வழங்கப்படும். அந்நிறுவனம் பொருட்களுக்கான விலை மற்றும் கமி‌ஷனாக சில ஆயிரங்களை எடுத்துக் கொண்டு மீதத்தை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்து விடும்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் கடந்த 2009ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது தொடங்கி 8 ஆண்டுகளாக இந்த ஊழல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இன்றைய நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 8000 ஆகும். ஒரு பள்ளிக்கு ரூ.25,000 என வைத்துக் கொண்டால் 8000 பள்ளிகளிலும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.20 கோடி அளவுக்கு ஊழல் செய்யப்படுகிறது. இது மிகக்கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள அதிகாரி உதயச்சந்திரன் தமிழகத்தின் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர்.

இவர் பதவியேற்ற பின்னர் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படியான 25 சதவீத மாணவர் சேர்க்கையை ஆன்லைன் முறையில் நடத்த நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். இவை பாராட்டத்தக்கவை ஆகும். அதேபோல், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு நிதியில் நடைபெறும் ஊழலைக் களையவும், இது வரை நடந்த ஊழலுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

About the author

Julier