political

கிருஷ்ணர் குறித்து சர்சசை கருத்து: பிரசாந்த் பூஷன் மீது ராஜஸ்தான் போலீசில் புகார்

 ஜெய்ப்பூர்:

உத்தரபிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரோமியோ எதிர்பு படையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில் முன்னாள் ஆம் ஆத்மி தலைவரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் டுவிட் செய்திருந்தார்.

அதில், “ரோமியோ ஒரே ஒரு பெண்ணை தான் காதலித்தார். ஆனால் கிருஷ்ணன் ஒரு பழம்பெரும் கிண்டல்காரன். அதனால் தைரியம் இருந்தால், ரோமியோ எதிர்ப்பு படையின் பெயரை கிருஷ்ணன் எதிர்ப்பு படை என்று மாற்றுவாரா?” என்று குறிப்பிட்டு இருந்தார்.

பிரசாந்த் பூஷனின் இந்த கருத்துக்கு பாரதீய ஜனதா கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்து மத நம்பிக்கை கொண்டவர்களை பிரசாந்த் பூஷனின் கருத்து காயப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் பிரசாந்த் பூஷன் மீது, விஷ்வ இந்து பரிஷத் தொண்டர் பங்கஜ் திவாரி புகார் கொடுத்துள்ளார். பிரசாந்த் பூஷன் தனது கருத்துக்கள் மூலம் மத உணர்வுகளை பூஷன் காயப்படுத்தியிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்க வேண்டும் என்றும் திவாரி தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படலாம் என தெரிகிறது.