political

‘ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்ய வைத்த விக்ரம் பத்ரா ஐ.ஆர்.எஸ்?!’ – இறுதி கள நிலவரம்

அ.தி.மு.க அம்மா அணி சார்பில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் வரையில் விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரம் சிக்கியதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம். ‘வருமான வரித்துறை சோதனைக்கு முன்பாகவே, தேர்தல் ரத்து குறித்து மத்திய அரசில் உள்ளவர்கள் தீவிர ஆலோசனையில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாகவே ஐ.ஆர்.எஸ் அதிகாரி விக்ரம் பத்ரா அனுப்பப்பட்டார்’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, ஆளும்கட்சி நிர்வாகிகள் கள வேலைகளில் தீவிர ஆர்வம் காட்டினர். ஒரே காரணம், ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியில் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதுதான். இரட்டை இலை முடக்கத்துக்குப் பிறகும், தொப்பி சின்னத்தை வீடு வீடாகக் கொண்டு சென்றனர். பண விநியோகத்திலும் விதம்விதமான யுக்திகளைக் கடைபிடித்தார் தினகரன். எந்த ஒரு நிர்வாகியிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் சிக்காத அளவுக்கு 20 ஆயிரம், 30 ஆயிரம் எனப் பணத்தைப் பிரித்து விநியோகிக்க வைத்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் மதுசூதனனும், வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரையில் விநியோகித்ததாக செய்திகள் வெளியானது. “தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கும் என்பதில் தி.மு.க நிர்வாகிகள் உறுதியாக இருந்தனர். ஒருவேளை ரத்து செய்யாவிட்டால் பார்த்துக் கொள்ளலாம் என தலைமைக் கழகத்தில் இருந்து அறிவுறுத்தியிருந்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த அன்றே, தஞ்சை, அரவக்குறிச்சியைப் போல் தேர்தலை ரத்து அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே நடந்துவிட்டது” என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.

விக்ரம் பத்ராவருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “தலைமைச் செயலகத்தில் கடந்த நான்கு நாட்களாகவே தேர்தல் ரத்து தொடர்பான ஆலோசனைகள் வேகம் எடுத்து வந்தன. ஆர்.கே.நகரில் நடக்கும் பண விநியோகம் தொடர்பாக, தி.மு.க, சி.பி.எம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியைச் சந்தித்துப் புகார் மனு கொடுத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையரை  சந்திக்க அரசியல் கட்சிகள் சென்றுள்ளனர். அப்போது தீவிர மன உளைச்சலில் லக்கானி இருந்தார். ‘ தேர்தலை ரத்து செய்யுங்கள்’ என டெல்லியில் இருந்து வந்த அழுத்தத்துக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார். கடந்த ஒரு வார காலமாக அவரிடம் இருந்து உறுதியாக எந்தப் பதிலும் வராததால், டெல்லியில் உள்ளவர்களுக்கு அவர் மீது கடும் கோபம் ஏற்பட்டது. இதையடுத்தே, ஐ.ஆர்.எஸ் அதிகாரியான விக்ரம் பத்ராவை அனுப்பி வைத்துள்ளனர். தேர்தல் செலவீனங்கள் தொடர்பானவற்றில் மிகச் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர் விக்ரம் பத்ரா. எந்த இடத்தில் எப்படியெல்லாம் விநியோகம் நடக்கும்; அதை எப்படிக் கையும் களவுமாகப் பிடிப்பது என்பதில் பத்ராவின் அனுபவம் மிக அதிகம். அவரது வருகைக்குப் பிறகே வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியில் சுறுசுறுப்பு நிலவியது. பணம் செல்கின்ற பாதையை மிக எளிதாக ட்ரேப் செய்துவிட்டனர்.

விஜயபாஸ்கர்குறிப்பாக, சீனியர் அமைச்சர்களின் உதவியாளர்கள் அனைவரும் கண்காணிப்பு வளைத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்ற யோசனையே இல்லாமல், வெளிப்படையாகவே அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள் நடந்து கொண்டனர். இதுகுறித்து, மிக முக்கியமான ஆதாரம் ஒன்று சோர்ஸ் மூலம் எங்களுக்கு வந்து சேர்ந்தது. இதன்பின்னரே விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்தோம். ரெய்டின்போது ஏராளமான பணம் பிடிபடும் என்று நினைத்தோம். அவரது வரவு செலவு கணக்குகள் குறித்த அத்தனை ஊழல் விஷயங்களும் வெளிப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. சேகர் ரெட்டி கைதுக்குப் பிறகு ஆளும்கட்சி அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த சோதனையும் நடத்தவில்லை. ‘ தங்கள் பக்கம் வர மாட்டார்கள்’ என்ற நம்பிக்கையில் அவர்கள் வலம் வந்தார்கள். கூவத்தூர் நிகழ்வுக்கு முன்பிருந்தே விஜயபாஸ்கருக்குப் பணம் வரும் வழிகளைக் கண்டறிந்து, கண்காணித்து வந்தோம். அவரை நெருங்குவதற்கு ஆர்.கே.நகர் தேர்தல் களம் ஒரு கருவியாக அமைந்தது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் விளக்குவதற்காக சனிக்கிழமை காலையில் விக்ரம் பத்ரா சென்றார். மறுநாள்(ஞாயிறு) லக்கானி சென்றார். லக்கானி வந்து சேருவதற்கு முன்பாகவே, தேர்தலை ரத்து செய்வது தொடர்பான முடிவை எடுத்துவிட்டனர்” என்றார் விரிவாக.

” வாக்காளர்களுக்குப் பண விநியோகம் தொடர்பான தகவல்கள், இந்தளவுக்கு பகிரங்கமாக வெளியானதற்குக் காரணமே, தினகரனுக்கு தற்போது வலதுகரமாக இருக்கும் தென்மாவட்டப் புள்ளி ஒருவர்தான். பண விநியோகம் தொடர்பாக மூத்த அமைச்சர்களை அவர் தவறாகக் கையாண்டுவிட்டார். பணப்பட்டுவாடா தொடர்பான தகவல்களை வெகு சுதந்திரமாக வெளியில் உலவவிட்டுவிட்டார். ‘ சொந்த தொகுதிக்குள்ளேயே போட்டியிட்டுத் தோற்றுப் போனவருக்கு, ஆர்.கே.நகரில் விநியோகத்தைக் கவனிக்கும் பொறுப்பைக் கொடுத்தால் இப்படித்தான் இருக்கும்’ என தினகரனிடமே சீனியர்கள் சிலர் புகார் கூறியுள்ளனர். இதை காதில் வாங்காமல், மத்திய அரசின் முடிவால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் தினகரன். ‘ அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் நடக்கவிடாமல் சதி செய்துவிட்டனர். ‘நாம் வெற்றி பெறுவோம் என உறுதியாகத் தெரிந்தாலே, தேர்தலை ரத்து செய்யும் முடிவை அவர்கள் எடுப்பார்கள்’ என்பது நாம் அறிந்ததுதான். மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’ எனப் பேசியிருக்கிறார். ‘வருமானவரித்துறைக்கு நம்மைக் காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடு எது?’ என்ற கேள்விதான் ஆளும்கட்சியினர் மத்தியில் வலம் வருகிறது” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

இன்று காலை வருமான வரித்துறையின் சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ‘ஆர்.கே.நகரை மையப்படுத்தி மட்டுமே கேள்விகள் இருக்காது; அதையும் தாண்டி பல விஷயங்களைத் துருவ இருக்கிறது புலனாய்வுத்துறை’ என்கின்றனர் வருமானவரித்துறை வட்டாரத்தில்.