political

தி.மு.க வெற்றியை தடுக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

 சென்னை:

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் இன்று நடந்தது.

‘நாடு நலம் பெற’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பொது மக்களின் கருத்துக்களை மு.க.ஸ்டாலின் கேட்டு அறிந்தார்.

இறுதியில் அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் நமக்கு நாமே பயணம் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து வந்து இருக்கிறேன். இப்போது மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

இன்றைக்கு தமிழகம் தொழில் வளர்ச்சி, விவசாயத்தில் மோசமான நிலையில் உள்ளது. விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் எல்லோரும் போராட்டக் களத்தில் தான் உள்ளனர். இங்கு போராட்டம் நடத்தி பலன் இல்லாததால் டெல்லி சென்று விவசாயிகள் போராடுகிறார்கள்.

இந்த ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு இந்த ஆட்சி முன் உதாரணமாக இருக்கிறது.

விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காண அ.தி.மு.க அரசு தவறிவிட்டது. எதிர்கட்சிகளாகிய நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து பேச தான் முடியும். அறிக்கை விடுவோம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இதை தான் எங்களால் செய்ய முடியும்.

ஆனால் முதல்-அமைச்சரால் விவசாயிகளை சந்தித்து அவர்களது பிரச்சனைகளை மத்திய அரசிடம் பேசி தீர்வு காண முடியும். இதை செய்ய எடப்பாடி பழனிச்சாமி தவறி விட்டார்.

இடைதேர்தலுக்காக அவர் பிரசாரத்துக்கு சென்று வருகிறார். டி.டி.வி. தினகரனின் வெற்றிக்கு பாடுபடுவதாக பிரசாரத்தின் போது சொன்னாலும் உண்மையிலேயே அவரது நோக்கம் அதுவல்ல. தினகரன் ஜெயிக்க கூடாது என்றே அவரது உள்மனது சொல்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் தொகுதி மக்களின் குறைகளை நிறைவேற்ற கூடியவர் எங்கள் வேட்பாளர் மருது கணேஷ் தான்.

நான் சென்னையில் இருக்கும் போது கொளத்தூர் தொகுதிக்கு சென்று வருவது போல் மருது கணேசுடன் இணைந்து மக்கள் பணியாற்றுவேன். தொகுதி மக்களின் குறைகளை என் மனதில் ஆழமாக பதியவைத்து விட்டார்.

உள்ளூர் மக்களின் சிரமங்களை உணர்ந்தவர் எங்கள் வேட்பாளர். எனவே அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வையுங்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் ஆர்.கே.நகர் மிகவும் மோசமான தொகுதியாக உள்ளது. ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியாக இருந்தாலும் இன்னும் இந்த தொகுதி முன்னேறவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிக்கியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சசிகலா. ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்த சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை சிக்க வைத்து விட்டனர்.

ஜெயலலிதாவுக்கு கெட்டபெயர் வந்ததற்கு காரணமே சசிகலா குடும்பம் தான்.

சசிகலாவின் உறவினரான டி.டி.வி தினகரன் ஆர்.கே.நகரில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளார். எவ்வளவுதான் பணப்பட்டுவாடா நடந்தாலும் தி.மு.க வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஆர்.கே.நகரில் நிச்சயம் தி.மு.க வெற்றிபெறும்.

மக்களின் ஆதரவும் தி.மு.க.வுக்கு தான் இருக்கிறது. எனவே நீங்களும் தி.மு.க வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

About the author

Julier