Sports

என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற எலியாட் சொல்கிறார்

என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், என்று நியூசிலாந்து அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ள எலியாட் கூறியுள்ளார்.

11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் நடந்த முதலாவது அரைஇறுதியில் உள்ளூர் அணியான நியூசிலாந்தும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான திரிலிங்கான அரைஇறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தென்ஆப்பிரிக்காவை ஓட ஓட விரட்டியடித்த 36 வயதான கிரான்ட் எலியாட் நியூசிலாந்து மண்ணின் மைந்தன் கிடையாது. அவர் தென்ஆப்பிரிக்க நாட்டுக்காரர் என்பது ஆச்சரியமான உண்மையாகும்.

தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்த எலியாட், அங்கு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். தென்ஆப்பிரிக்க அணித்தேர்வில் இனரீதியிலான இடஒதுக்கீடு கொள்கை கடைபிடிக்கப்படுவதால் அவருக்கு அந்த அணியில் இடம் மறுக்கப்பட்டது. அவரது திறமையை கண்டு வியந்த நியூசிலாந்து முன்னாள் டெஸ்ட் வீரர் கென் ருதர்போர்டு, தங்கள் நாட்டிற்கு வரும்படி ஆலோசனை வழங்கினார். அதன்படி 2001–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவை காலி செய்து விட்டு நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார். படிப்படியாக நியூசிலாந்து அணியில் இடம் பிடித்து இன்று ஒரே நாளில் புதிய ஹீரோவாகவும் உருவெடுத்து விட்டார்.

84 ரன்கள் விளாசி நியூசிலாந்தை முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். எலியாட் கூறுகையில், ‘இந்த வெற்றி எனக்குரியதோ அல்லது நியூசிலாந்து அணிக்குரியதோ அல்ல. ஒட்டுமொத்த நியூசிலாந்து மக்களுக்குரியது. நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது உண்மையிலேயே பெருமை அளிக்கிறது. இறுதிப்போட்டியில் யாரை சந்திக்கப்போகிறோம் என்பது கவலையில்லை. இரு அணியுமே (இந்தியா அல்லது ஆஸ்திரேலியா) தரமான அணி தான். இதே போன்று நாங்கள் தொடர்ந்து விளையாடினால் கோப்பையை வெல்வதற்கு எங்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது’ என்றார்.

என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், என்றும் நியூசிலாந்து அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ள எலியாட் கூறியுள்ளார். போட்டியில் தான் விளையாடிய நியூசிலாந்து வெற்றிபெற்றாலும், தோல்வியின் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் மைதானத்தில் விழுந்த ஸ்டெயினுக்கு, எலியாட் ஆறுதல் கூறினார். எனது தங்கைக்கு வருகிற வெள்ளியன்று திருமணம் நடைபெற உள்ளது, துரதிஷ்டவசமாக நான் அவருடைய திருமணத்தை மிஸ் செய்கிறேன். நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் என்னுடைய அழகான சந்தோஷம், ஆனால் நான் அவருக்கான சிறப்பு பரிசை பெறுவதற்கு செல்கிறேன் என்று நினைக்கிறேன். என்று எலியாட் கூறினார்.