Sports

தியேட்டர்களுக்கு விடுமுறை அளித்த இந்திய கிரிக்கெட் அணி

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றைய போட்டியில் இலங்கை அணியை தென்னாப்பிரிக்க அணி தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று இந்திய அணி வங்கதேச அணியுடன் காலிறுதியில் மோதவுள்ளது.

இந்திய-வங்கதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை அடுத்து இன்று சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் உள்ள தியேட்டர்களில் கூட்டம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 9 மணிக்கே போட்டி ஆரம்பமாகவுள்ளதால் இன்றைய தினம் பல தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்துவிட்டு பராமரிப்பு பணிகளை பார்க்க தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இன்றைய போட்டியிலும், அடுத்து வரவுள்ள அரையிறுதியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் மார்ச் 29ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் விளையாட இந்திய அணி தகுதி பெறும். எனவே மார்ச் 27ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்த கார்த்தி நடித்த ‘கொம்பன்’ உள்பட பல படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. கொம்பன் படம் ஏற்கனவே ஏப்ரல் 2 என ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.