Sports

மாவட்டங்களுக்கு இடையேயான ஆக்கி போட்டி: அரை இறுதிக்கு மதுரை அணி தேர்வு

 திருப்பரங்குன்றம் :

மதுரை, திண்டுக்கல், கோவில்பட்டி ஆகிய இடங்களில் மாவட்டங்களுக்கு இடையேயான ஜூனியர் ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. மதுரை திருநகர் அண்ணாபூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மதுரை, அரியலூர், கடலூர், கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், திருவள்ளூர் ஆகிய 7 மாவட்ட அணிகள் களம் இறங்கி விளையாடின.

நேற்று நடந்த போட்டியில் மதுரை அணியும், அரியலூர் அணியும் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் மதுரை அணி வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றது.

இன்று(வியாழக்கிழமை) கோவில்பட்டியில் நடை பெறும் அரை இறுதி போட்டியில் மதுரை அணி களம் இறங்குகிறது.

அரை இறுதிக்கு தேர்வு பெற்ற மதுரைஅணி ஆக்கி வீரர்களை தமிழ்நாடு ஆக்கி யூனிட் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மதுரை மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் ரமேஷ், மதுரை மாவட்ட தலைவர் கண்ணன், துணைத் தலைவர் வி.கண்ணன், மூத்த பயிற்சியாளர் அழகப்பன், திருநகர் ஆக்கி கிளப் பொறுப்பாளர்கள் பாலு, செந்தில் ஆகியோர் பாராட்டினர்.