Story Tamil

அறியாப்பருவக் காதல்

இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப்பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார்கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என்று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என்பதை உயிரினும் மேலாக நினைப்பார்கள். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும்.

அதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காதலில் இறங்கிவிடுவார்கள்.

தன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடுக்க நினைப்பார்கள். தன்னிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எதிரே இருப்பவரின் தகுதியினை மட்டுமே பார்ப்பார்கள்.

தனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நபர்களை மற்ற பிரிவில் சேர்க்காமல், மிக எளிதான வாழ்வினை சமாளிக்க முடியாதவர்கள் என்ற பிரிவில் அறிவியலாளர்கள் சேர்த்துவிடுகிறார்கள்.

காதலை அல்லது காதலனை வாழவைப்பதற்கு அடிப்படைத் தேவையான வருமானம், மன உறுதி, உடல் உறுதி போன்றவை இல்லாதவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள்.

பணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்கலாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது.

ஆனால் நாம் காதலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், திருமணம் முடிப்பது பற்றியும், அதற்குப் பின்னரும் வாழ்நாள் முழுவதும் காதல் தொடர்வதற்கான வழி சொல்லிக் கொண்டிருப்பதால், வருமானம் இல்லாதவர்கள் காதலின் அடுத்தக் கட்டத்தை தொடமுடியாது என்பதுதான் நிஜம்.

எப்படி ஒரு டீன் ஏஜ் வயதில் திருமனம் என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதில் சமூகம் உறுதியாக இருக்கிறதோ, அப்படியே காதலில் விழுந்த ஆண் அல்லது பெண்ணிடம் வாழ்வதற்கு ஆதாரத் தேவையான வருமானம் இல்லாத பொழுது, அந்தக் காதலும் ஏற்றுக்கெள்ளப்படாது.

வருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழுத் தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொழுது காதலிக்கப்படவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வெற்றி?

டீன் ஏஜ் வயதில் காதல் என்பதை சட்டமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.

அதேபோல் வருமானம் இல்லாதபட்சத்தில் காதலின் அடுத்தக்கட்டத்தை தொட சம்பந்தப்பட்டக் காதலர்களே விரும்பமாட்டார்கள். அதனால் டீன் ஏஜ் காதலர்கள் எல்லாம் இந்த அத்தியாயத்தோடு ஜோராக கைதட்டி விடைபெறலாம். இதுவரை வருமானம் இல்லை என்றாலும், வருமானத்திற்கு தீவிர முயற்சி எடுக்கும் காதலர்கள் தவிர, மற்றவர்களும் வெளியேறிவிடலாம்.