Story Tamil

யோசித்து பார்….பின் உனக்கே புரியும்….

கோபத்தை அடக்குவது எப்படி?
ஜென் குரு பங்கேயின் மாணவன் ஒருமுறை அவரிடம் வந்து “மாஸ்டர், எனக்கு அடக்க முடியாத கோபம் வருகிறது. இதை எப்படி குணப்படுத்துவது?” என்று கேட்டான்.
அப்படியெனில் “ஏதோ ஒன்று உன்னை பயங்கரமாக ஆட்டி வைக்கிறது. சரி, இப்பொழுது அந்த அடக்க முடியாத கோபத்தை காட்டு” என்று சொன்னார்.
அதற்கு மாணவன் “அதை இப்பொழுதெல்லாம் காட்ட முடியாது” என்றான்.
“வேறு எப்பொழுது காட்ட முடியும்?” என்று குருவும் கேட்டார்.
அதற்கு அவன் “அது எதிர்பாராத நேரத்தில் தான் வருகிறது” என்றான்.
அப்போது குரு “அப்படியென்றால் அது உன்னுடைய சொந்த இயல்பாக இருக்க முடியாது. அவ்வாறு உனக்கு சொந்தமானதாக இருந்தால், நீ எந்த நேரத்திலும் எனக்கு அதை காண்பித்திருப்பாய். நீ பிறக்கும் போது அதை கொண்டு வரவில்லை, உன் பெற்றோரும் உனக்கு அதை கொடுக்கவில்லை. அப்படியிருக்க உனக்கு சொந்தமில்லாத ஒன்றை ஏன் உன்னுள் வைத்துள்ளாய் என்று யோசித்து பார். பின் உனக்கே புரியும்” என்று சொன்னார்.