History Tamil

5,500 ஆண்டு அல்ல சிந்து சமவெளி நாகரீகம் 8,000 ஆண்டு பழமையானது

கொல்கத்தா : சிந்து சமவெளி நாகரீகம் 5,500 ஆண்டுகளுக்கு முந்தைய அல்ல; அது 8,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று அகழ்வாய்வாளர்கள், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிறு வயதில் சரித்திர (இன்றை சமுக அறிவியல்) பாடத்தில் உலகின் பல நாகரீகங்கள் குறித்து படித்திருப்போம். நாகரீகங்கள் பெரும்பாலும் ஆற்றுப்பகுதியை ஒட்டிதான் தோன்றி வளர்ந்தன என வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். இதன் அடிப்படையில், சிந்து சமவெளி நாகரீகம் சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முந்தையது என அப்ேபாது கிடைத்த அகழ்வாரய்ச்சி முடிவுகளின்படி கணித்தனர். இதுவே வரலாற்றிலும் இடம் பெற்றது. ஆனால், ஹரப்பா நாகரீகத்துக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரீகம் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. கோரக்பூர் ஐஐடியின் நில அமைப்பியல், புவி இயற்பியல் துறை தலைவர் அனிந்தியா சர்க்கார் தலைமையிலான குழு மற்றும் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளும் இணைந்து புதிய ஆய்வை மேற்கொண்டனர். இது தொடர்பான கட்டுரை ‘நேச்சர்’ என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அகழ்வாராய்ச்சியின்போது, மண்பாண்டங்களின் பாகங்கள் கிடைத்தன. இவற்றின் வயதை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம். இதில் இவை 6000 ஆண்டுகளுக்கு முந்தயை ஹரப்பா நாகரீகத்தை விட தொன்மையானது என்பது தெரியவந்தது. எனவே சிந்து சமவெளி நாகரீகம் 8,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த நாகரீகம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பான 7,000-3000 ஆண்டுகளுக்கு முந்தை எகிப்து நாகரீகம்,  6,500-3,100 ஆண்டுகளுக்கு முந்திய மெசபட்டோமியா நாகரீகத்துக்கும் முந்தையது. சிந்து சமவெளி நாகரீகம் இதற்கு முன்பே வேரூன்ற தொடங்கி விட்டது. இந்த நாகரீகம் அரியானாவில் பிர்ரானா, ராஹிகார்ஹி போன்ற இடங்களுக்கும் பரவியது. இந்த இடங்களில் அகழ்வாய்வை மேற்கொண்டோம். இங்கு அதிக எண்ணிக்கையிலான பசு, ஆடு, மான், கலைமான் போன்ற விலங்குகளின் எலும்புகள், பற்கள், கொம்புகள் கிடைத்தன.

இவற்றை, ‘கார்பன் 14’ டேட்டிங் பகுப்பாய்வு முறையில் சோதனை செய்தோம். இதன் மூலன் இவற்றின் வயது, அப்போதிருந்த பருவ நிலையை தெரிந்து கொள்ள உதவியது.  சிந்து சமவெளி நாகரீகம் இந்தியா முழுவதும் பரவியிருந்தது. குறிப்பாக இப்போது மறைந்துவிட்ட சரஸ்வதி நதி அல்லது காஹர்-ஹக்ரா நதியின் கரையோர பகுதிகளில் இது நிறைந்து காணப்பட்டது. ஆனால் இவை குறித்து நமக்கு தெரியாமலேயே போய்விட்டது. நாம் ஆங்கிலேயர்களின் தொல்லியல் முடிவுகளைதான் பின்பற்றி வந்தோம். எங்களது அகழ்வாய்வின்போது, சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தைய (அதாவது 9000-8000 ஆண்டுகளுக்கு முன்பு) முதல் ஹரப்பா நாகரீகம் தொடங்கிய காலம் தொடங்கி வரை (8000-7000 ஆண்டுகள்) நன்கு வளர்ந்த ஹரப்பா நாகரீகம் காலம் வரையிலான பாதுகாக்கப்பட்ட அனைத்து கலாசார நிலைகளையும் கண்டோம்.

ஹரப்பா காலத்தில் திட்டமிடப்பட்ட நகரங்கள், கைவினைப் பொருள்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன. அரேபியா, மெசபட்டோமியா நகரங்களுடன் வர்த்தகம் செய்து வந்துள்ளனர். சிந்து சமவெளி பகுதி மக்கள் நிலையானவர்கள். உறுதியானவர்கள். பருவமாற்றங்களை பற்றி கவலை கொள்ளவில்லை. அதிக தண்ணீர் தேவைப்படும் கோதுமை, பார்லி முதல் வறட்சி தாங்கும் பயிர்களையும் மாற்றி மாற்றி பயிரிட்டுள்ளனர். மகசூல் குறைய தொடங்கியவுடன் விளைந்தவற்றை சேமிக்கும் முறைகளை பிற்கால ஹரப்பா மக்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் நகரங்களை விட்டு இடம் பெயர்வது குறைந்தது.  இவர்கள் காலத்தில் தனிதனி வீடுகளில் வசிக்கும் பழக்கம் தொடங்கியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.