Technology

பேஸ்புக் F8: மனதில் நினைப்பதை டைப் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்

கலிபோர்னியா:
பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இத்துடன் சில சாதனங்களும் புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து F8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அந்நிறுவனம் புதிய சாதனங்களை வெளியிட்டது. இவை முற்றிலும் வித்தியாசமானதாகவும், அபாயகரமானதாகவும் இருந்தது. இத்துடன் சில திட்டங்களுக்கான முன்னோட்ட வீடியோக்களும் திரையிடப்பட்டன.
அவ்வாறு பேஸ்புக் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்த சாதனங்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,
சரவுண்டு 360 கேமராக்கள்:
பேஸ்புக் நிறுவனத்தின் புதிய 360 டிகிரி டெவலப்பர் கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. X24 மற்றும் X6 என அழைக்கப்படும் இந்த கேமராக்கள் பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டின் F8 நிகழ்வில் அறிமுகம் செய்த பேஸ்புக் சரவுண்டு 360 மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட மாடல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கண்ணாடிகள்:
ஆகுலஸ் நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் மைக்கேல் அப்ராஷ் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி (AR) மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கண்ணாடிகள் இடையேயான வித்தியாசம் குறித்து பேசினார். ‘முழுமையான ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி என்பது ஆடியோ மற்றும் வீடியோ என இரண்டையும் இயக்கும் திறன் கொண்டிருக்கும். இது அவ்வப்போது பயன்படுத்தப்படும் சாதாரண ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி போன்று இருக்காது’, என அவர் தெரிவித்தார்.
இம்மாதிரியான தொழில்நுட்பம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிரபலமாகி, வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பில்டிங் 8:
பேஸ்புக்கின் ரெஜினா டௌகன், அந்நிறுவனத்தின் மர்மமான பில்டிங் 8 திட்டம் குறித்து விளக்கினார். இந்த திட்டமானது மனதில் நினைப்பதை வார்த்தைகளாக டைப் செய்யும் வழிமுறை ஆகும். மனித மூளையில் அனைத்து செயல்களையும் மேற்கொள்ள உதவும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிறிய சிப்செட்கள், மூளை நினைப்பதை அப்படியே டைப் செய்ய வழி செய்கிறது.
அதாவது, மூளையின் ஸ்பீச் சென்டரில் இருந்து வரும் வார்த்தைகளை, நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப் செய்ய வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் டைப் செய்வதை விட ஐந்து மடங்கு வேகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக நிமிடத்திற்கு 8 வார்த்தைகளை டைப் செய்ய முடியும் என டௌகன் தெரிவித்துள்ளார்.