Technology

ஃபேஸ்புக்கில் புதிதாக வந்துள்ள ராக்கெட் ஐகான் என்ன செய்யும்?

 

ஃபேஸ்புக் ஆப் வைத்திருக்கிறீர்களா? தற்போடு வந்துள்ள புதிய அப்டேட்டில் உள்ள ராக்கெட் ஐகான் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஃபேஸ்புக் எப்போதுமே அப்டேட்டில் ஆச்சர்யமளிக்கும் விஷயங்களை அளிக்கும். இப்போதும் இந்த ராக்கெட் ஐகான் மூலம் யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இந்த ஐகானை அறிமுகம் செய்ததற்கு ஃபேஸ்புக் கூறும் காரணங்கள் இவை தான்…

இந்த ராக்கெட் ஐகான் மூலம் நீங்கள் இருக்கும் பகுதியின் பிரபலமான பதிவுகளை காண முடியும். இதற்கு நீங்க அந்த பக்கத்தை லைக் செய்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அல்லது ஒரு தனி நபரின் பதிவு வைரலாகி இருந்தாலும் அவர் உங்களது நண்பராக இல்லாவிட்டாலும் அந்த பதிவை உங்கள் டைம்லைனில் பார்க்க இந்த ராக்கெட் ஐகான் உதவும்.

இந்த ராக்கெட் ஐகானில் ஃபேஸ்புக் பெரும்பாலும் வீடியோ மற்றும் ஃபேஸ்புக் இன்ஸ்டன்ட் ஆர்ட்டிகிள் பதிவுகளையே காட்டுகிறது.  ஃபேஸ்புக் உங்களது டைம்லைனில் நீங்கள் பதிவுடும் பதிவுகள், நீங்கள் விரும்பும் ஃபேஸ்புக் பக்கங்கள், நீங்கள் அதிகம் விரும்பும் விஷயங்கள் என ஒவ்வொருவருக்குமான தனி டேட்டாவை எடுத்து வருகிறது. அதன் மூலம் ஒருவரது விருப்பம் என்ன என்பதை தெளிவாக கண்டறிந்து அவரது விருப்பத்துக்கு ஏற்ற பதிவை அவரது டைம்லைனில் நண்பர்கள் அல்லது நண்பர்களின் நண்பர்கள் என்ற அடிப்படையில் காட்டுகிறது.

ராக்கெட்

ஆனால் இந்த ராக்கெட் ஐகான், நீங்களோ அல்லது உங்களது நண்பரோ விரும்பாத ஒரு பக்கத்திலிருந்து உங்களது விருப்பத்துக்கு ஏற்ற பதிவை எடுத்து தருகிறது. இதே வசதி இன்ஸ்டாகிராமில் எக்ஸ்ப்ளோர் என்ற பெயரில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக ஃபேஸ்புக் மற்ற ஆப்களில் உள்ள சிறப்பம்சங்களை தனக்குள் எடுத்து வருகிறது. ஸ்னாப்சாட்டில் உள்ள கேமரா வசதி, இன்ஸ்டாகிராமில் உள்ள எக்ஸ்ப்ளோர் மற்றும் ஃபில்டர் வசதி, ஸ்டோரிஸ் வசதியை மெசன்ஜரிலும் கொண்டு வந்துள்ளது ஃபேஸ்புக்.

ஏற்கெனவே இன்ஸ்டன்ட் ஆர்ட்டிகிள் மூலம் உங்கள் இடத்துக்கு அருகில் எந்த செய்தி பிரபலம் என்பதை கொண்டு வந்த ஃபேஸ்புக் தற்போது இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. எல்லா விதமான மக்களையும் தனக்குள் இணைக்கும் ஃபேஸ்புக் புதிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நியூஸ் ரூம் திட்டத்துக்கு இது அடிப்படையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஃபேஸ்புக்கின் இந்த அதிரடி அப்டேட்டுகள் எல்லாவற்றுக்கு பின்புமே ஒரு பெரிய திட்டத்துக்கான அடித்தளம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஃபேஸ்புக் டேட்டாக்களை வைத்து மிகப் பெரிய மாயாஜாலங்களை காட்டும் நிறுவனம். தனது ஒவ்வொரு அப்டேட்டிலும் ஏதோ ஒரு புதிய விஷயத்தை அறிமுகம் செய்து டேட்டாவை பெறுகிறது. வரும் காலத்தில் உலகில் யாருக்கு எது பிடிக்கும் என்பதை ஃபேஸ்புக்கிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகலாம். இதற்காக டேட்டா சென்டர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது ஃபேஸ்புக். உங்களுக்கு தியாகராய நகரில் உள்ள குறிப்பிட்ட கடையில் இரண்டாவது தளத்தில் உள்ள டி-ஷர்ட் தான் பிடிக்கும் எனும் அளவுக்கு ஒரு நாள் ஃபேஸ்புக் பூதாகரமாக வளர்ந்து நிற்கும்…இது தான் ஃபேஸ்புக்கின் டேட்டா உ(பு)த்தி…