World

மியான்மர் நாட்டில் படகு கவிழ்ந்து திருமண வீட்டுக்குச் சென்ற 20 பேர் பலி

நைபெய்டா:

மியான்மர் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பாதேய்ன் நகர நதியில் நேற்று அங்குள்ள திருமண வீட்டிற்கு பலர் படகில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது படகு திடீரென கட்டுப்பாடை இழந்து நதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் படகு தலைகீழாக கவிழ்ந்ததும், படகில் இருந்த அனைவரும் நீரில் விழுந்து தத்தளிக்க ஆரம்பித்தனர்.

இந்த கோர விபத்தில் 20 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் 27 பேரை மீட்டனர். மேலும், பலர் காணமல் போயுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படகில் கணிசமான அளவுக்கு பெண்களும் குழந்தைகளும் இருந்துள்ளதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நதியைப் பொறுத்தவரை அதிகளவிலான படகுகள் போக்குவரத்தில் இருப்பதால், இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடந்த படகு விபத்தில் 73 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.