Cinema

மீண்டும் சினிமா பக்கம் கவனம் செலுத்த உள்ள சீமான்

பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான், இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன் நடித்த `வாழ்த்துக்கள்’ திரைப்படம் வெளியானது. கடந்த 2013-ல் `நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீமான், நாம் தமிழர் கட்சியையும் நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் சினிமா பக்கம் கவனம் செலுத்த உள்ள சீமான், பாதியிலேயே விட்ட பகவலன் படத்தை மீண்டும் இயக்க முடிவெடுத்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டில் விஜய்யை வைத்து `பகலவன்’ படத்தை இயக்கவிருந்தார். அப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், திடீரென அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

இந்நிலையில், 7 வருடங்களுக்கு பிறகு `பகலவன்’ படத்தின் பணிகளை சீமான் மீண்டும் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக முன்பாகவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில், இசையமைப்பாளரிலிருந்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், அரசியலை மையமாக வைத்து மற்றொரு படம் ஒன்றையும் சீமான் இயக்க உள்ளாராம். அப்படத்திற்கு `கோபம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.