political

விவசாயிகள் தற்கொலை விவகாரம்: ஹேமமாலினிக்கு சுயேட்சை எம்.எல்.ஏ. கேள்வி

மும்பை:

மராட்டிய மாநில சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆக இருப்பவர் பச்சுகடு. இவர் நடிகை ஹேமமாலினி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதாலும், விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் நாடெங்கும் விவசாயிகள் தற்கொலை செய்யும் பரிதாப சம்பவம் நடக்கிறது. விவசாய கடன்களை திருப்பி செலுத்த முடியாமலும் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.

ஆனால் ஆளும் கட்சிக்காரர்கள் இதை திசை திருப்பும் செயல்களில்தான் ஈடுபடுகிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்வதற்கு மதுபானம் குடிப்பதும் காரணமாகும் என்று பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள்.

மது குடிப்பதால்தான் விவசாயி தற்கொலை செய்கிறான் என்று சொன்னால, நடிகர்-நடிகைகளும் தான் மதுபானம் குடிக்கிறார்கள். நடிகை ஹேமமாலினி கூட மது அருந்துகிறார். அவர் என்ன தற்கொலையா செய்து கொண்டார்?

விவசாய கடனை ரத்து செய்ய சொல்லும் விவசாயிகளுக்கு பா.ஜ.க. அரசு எந்த உதவியையும் செய்ய விரும்பவில்லை. எனவேதான் அவர்கள், மதுபானம் குடிப்பதால் விவசாயிகள் தற்கொலை செய்வதாக கூறி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.