political

மம்தா தலைக்கு ரூ.11 லட்சம் பரிசு: பாராளுமன்றத்தின் கடைசி நாளில் புயலை கிளப்பியது

புதுடெல்லி:
மேற்குவங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் தலைக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்சா அமைப்பு தலைவர் யோகேஷ் வர்ஷ்னே மிரட்டல் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக யோகேஷ் கூறுகையில், “மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு, நான் ரூ.11 லட்சம் பரிசாக தருவேன். மம்தா பானர்ஜி சரஸ்வதி பூஜை, ராம் நவமி கண்காட்சிகள், ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் ஆகியவற்றை அனுமதிக்கவே மாட்டார். இப்ஃதார் நோன்பு ஏற்பாடு செய்வார். முஸ்லீம்களுக்கு ஆதரவாகவே இருப்பார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் யுவ மோர்ச்சா தலைவரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல், பாராளுமன்றத்தின் கடைசி நாளில் இரு
அவைகளிலும் இந்த விவகாரம் வெடித்தது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சாவுகதா ராய், “மம்தா பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரி மட்டுமல்ல, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் கூட. இது மிகவும் முக்கியமான விஷயமாகும். இந்த விவகாரத்திற்கு அவை கண்டிக்க வேண்டும்” என்று பேசினார்.
சர்ச்சைக்குரிய கருத்தினை கூறிய யோகேஷுக்கு எதிராக மாநில அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம் என்று துணை சபாநாயகர் தெரிவித்தார். முதலில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த விவகாரத்தை இரு அவைகளிலும் கொண்டு வந்தனர்.
மாநிலங்களவையில் இது குறித்து பேசிய துணை சபாநாயகர் குரியன், யோகேஷுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம் என்று கூறினார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கண்டனங்களை தெரிவித்தனர். பா.ஜ.க.வின் கிளை அமைப்பான யுவ மோர்சாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேசுகையில், பா.ஜ.க வெறுமனே கண்டனம் மட்டும் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், உரிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்றார்.