political

டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மதுசூதனன் வலியுறுத்தல்

சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் நேற்று தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெரு, ஜீவா நகர், சுனாமி குடியிருப்பு உள்பட்ட இடங்களில் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது;-

டி.டி.வி.தினகரன் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்திருப்பது ஆவணங்களுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே தேர்தல் கமிஷன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் மக்களை பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்ற அவருடைய பகல் கனவு பலிக்காது. ஜெயலலிதா சாவுக்கு காரணமான அந்த கும்பலை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் என்னுடைய வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றும் ஓ.பன்னீர்செல்வம் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.