political

‘டி.டி.வி.தினகரனை ஏன் விட்டுச்சென்றது டெல்லி போலீஸ்?’ – வெளிவராத பரபரப் பின்னணி

டி.டி.வி.தினகரனிடம் சம்மனைக் கொடுத்த டெல்லி போலீஸார், சுகேஷ் சந்திரசேகர் குறித்து சில கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு டி.டி.வி.தினகரன், அவர் யார் என்று கேட்டுள்ளார். இதையடுத்து, வரும் 22-ம் தேதி விசாரணைக்கு டெல்லிக்கு வரச் சொல்லிவிட்டு புறப்பட்டுள்ளனர்.

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, புரோக்கர் சுகேஷ் சந்திரசேகருக்குக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டெல்லி போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயைப் பறிமுதல்செய்ததுடன் அவரையும் கைதுசெய்தது டெல்லி போலீஸ். அடுத்து, நேற்றிரவு டெல்லியிலிருந்து விமானம்மூலம் சென்னை வந்த டெல்லி போலீஸார், டி.டி.வி.தினகரன் வீட்டுக்குச் சென்றனர். அங்கு, அவரிடம் விசாரணைக்கு ஆஜராக சம்மனைக் கொடுத்தனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், எங்களுக்கு முழுவிவரங்கள் கிடைத்துள்ளன. மேலும், டி.டி.வி.தினகரன் தொடர்பான ஆவணங்களும் கிடைத்துள்ளன. இரட்டை இலைச் சின்னத்தை மீட்க டி.டி.வி.தினகரன் தரப்பே சுகேஷ் சந்திரசேகருக்கு பணம் கொடுத்துள்ளதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதுதொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த உள்ளோம். ஏற்கெனவே இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் வழக்கிலிருந்து தப்பிக்க, போலீஸார் சித்ரவதைசெய்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். போலீஸ் காவலில் உள்ள விசாரணைக் கைதியிடம், சட்டவிதிகளுக்கு உட்பட்டே விசாரணை நடத்தப்படுகிறது. இதுதொடர்பான விளக்கத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம். டி.டி.வி.தினகரனை, வரும் 22-ம் தேதி ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிட்டுள்ளோம். இதனால், டி.டி.வி.தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்துவதோடு, கூட்டாகவும் விசாரிக்க முடிவுசெய்துள்ளோம்.

இந்த வழக்கில், எங்களுக்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் சிக்கியுள்ளன. இதனால், யாரும் தப்ப முடியாது. சுகேஷ் சந்திரசேகர் குறித்து டி.டி.வி.தினகரனை சென்னையில் சந்தித்தபோது, ‘அவர் யார் என்றே எனக்குத் தெரியாது’ என்று தெரிவித்தார். அடுத்து, சில கேள்விகளை அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், சரியான பதிலைச் சொல்லவில்லை. டெல்லியில் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்துவதற்கான கேள்விகளைத் தயாரித்துள்ளோம். அந்தக் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை சரியில்லை. சம்மன் கொடுக்க வந்தபோது, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள், எங்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால்தான் டெல்லியில் அவரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளோம்” என்றார்.

சுகேஷ் சந்திரசேகர்

அ.தி.மு.க. சசிகலா அணியில், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் இருந்துவருகிறார். கட்சியில் அவருக்குரிய ஆதரவாளர்கள், தினமும் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். அவர்களிடம் எல்லாம், ‘அமைதியாக இருங்கள். ஓ.பன்னீர்செல்வம், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தத் துடிக்கும் அமைச்சர்கள் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் ஒரு முடிவு எடுத்த பிறகு, நம்முடைய முடிவை அறிவிப்போம். விரைவில் சசிகலாவைச் சந்தித்து, கட்சி நிலவரம் குறித்துப் பேச உள்ளேன். அவர், கொடுத்த பதவி இது. அவரது உத்தரவு இல்லாமல் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை கட்சிதான் முக்கியம்’ என்று டி.டி.வி.தினகரன் சொல்வதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். டி.டி.வி.தினகரன் மீது டெல்லி வழக்கின் பிடி இறுகுவதை உணர்ந்த டி.டி.வி.தினகரன், சீனியர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறாராம். தனக்கும் அந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க டி.டி.வி.தினகரன் தரப்பு தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறது. சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தில் உள்ள விவரங்களை மோப்பம் பிடித்த டி.டி.வி.தினகரன் தரப்பு, விசாரணையின்போது தெளிவாகப் பதிலடி கொடுக்கவும் முடிவுசெய்துள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

வரும் சனிக்கிழமை, டெல்லி போலீஸாரின் நடவடிக்கைகளைப் பொறுத்து டி.டி.வி.தினகரனின் அடுத்த அஸ்திரம் இருக்கும் என்று சொல்கின்றனர் அவரது தீவிர ஆதரவாளர்கள். டி.டி.வி.தினகரன், அவர் மீதுள்ள வழக்குகளை சட்டரீதியாக சந்திக்கத் தயாராகிவிட்டார். அதே நேரத்தில், அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டும் என்றும் அவர் விரும்புகிறாராம். அதற்காகத்தான் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து பெரிய அளவில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படவில்லையாம். அமைதியாக இருப்பதால் பயந்துவிட்டதாகக் கருதவேண்டாம். எங்களது அமைதிக்கான காரணம், பிறகு உங்களுக்குத் தெரியும் என்று சொல்கின்றனர் டி.டி.வி.ஆதரவாளர்கள்.

About the author

Julier