Sports

உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தை முன்னிட்டு ரெய்னாவின் வருங்கால மனைவி கிராமத்துக்கு உள்ளூர் விடுமுறை

பாக்பாத்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள முன்னணி பேட்ஸ்மேனான சுரேஷ்ரெய்னா, உத்தரபிரதேசத்தில் உள்ள பாம்னாலி கிராமத்தை சேர்ந்த தனது பால்ய தோழி பிரியங்கா சவுத்ரியை அடுத்த மாதம் (ஏப்ரல்) 3–ந் தேதி மணக்கிறார். சிட்னியில் நாளை நடைபெறும் ஆஸ்திரேலியா–இந்தியா அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டத்தை எல்லோரும் கண்டுகளிக்கும் வகையில் பிரியங்கா சவுத்ரியின் (சுரேஷ்ரெய்னாவின் வருங்கால மனைவி) சொந்த ஊருக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் கலுசிங் அறிவித்துள்ளார். இது குறித்து கலுசிங் கூறுகையில், ‘எங்கள் ஊரின் மருமகனாக சுரேஷ்ரெய்னாவை பெற்று இருப்பது பெருமைக்குரியதாகும். போட்டியை எல்லோரும் பார்க்கும் நோக்கில் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. போட்டி மெகா திரையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த கிராமமும் இந்திய அணியின் வெற்றிக்காக கோவிலில் பிரார்த்தனை செய்யும். இந்திய அணி வெற்றி பெற்றால் அதனை விருந்துடன் கொண்டாடவும் முடிவு செய்து இருக்கிறோம்’ என்றார்.