Technology

ரிலையன்ஸ் ஜியோவில் கட்டணம் செலுத்திய 5 கோடி பேர்: பிரைம் திட்டத்தில் சேராதவர்கள் நிலை?

மும்பை:
இந்தியாவின் புதிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் சில மணி நேரங்களில் நிறைவு பெற இருக்கிறது. இதை தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்ய கோரும் விளம்பரங்கள் அதிகரித்துள்ளது.
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் பெரும்பாலானோர் குழம்பி போயிருந்தாலும், 5 கோடி பேர் ஜியோ பிரைம் மற்றும் கூடுதல் ரீசார்ஜ்களை செய்துள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் நிலையில் ஜியோவின் புத்தாண்டு சலுகைகள் மார்ச் 31-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் ஜியோ வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள ஜியோ பிரைம் மற்றும் ரூ.149 என்ற குறைந்த விலை ரீசார்ஜ் பேக்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இவற்றை கொண்டு ஜியோ சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
தற்சமயம் கிடைத்துள்ள தகவல்களில் 100-105 மில்லியன் பயனாளர்களில் 30% பேர் இலவச டேட்டாவை பயன்படுத்தவே ஜியோவை பெற்றுள்ளனர். மீதமுள்ள 70 மில்லியன் பயனாளர்களில் மூன்றில் இரண்டு பேர் என்ற விகிதத்தில் ஜியோ பிரைம் திட்டங்களை தொடர்ந்து பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யாதவர்களின் சிம் கார்டு நிலை என்ன, ரூ.99 செலுத்தி பிரைம் ரீசார்ஜ் மட்டுமே செய்தவர்களின் நிலை என்ன?
ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் என்ன?
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் அல்லது ஜியோ எண்ணிற்கு வேறு எந்த ரீசார்ஜ்களையும் செய்யவில்லை எனில் குறிப்பிட்ட காலம் அதாவது ரீசார்ஜ் செய்யாமல் சுமார் 90 நாட்களுக்கு ஜியோ சிம் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.
குறிப்பு: ஜியோ ரீசார்ஜ் செய்யாமல் ஜியோ சேவைகள் எதுவும் வேலை செய்யாது, இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ், மற்றும் எஸ்எம்எஸ் எதுவும் வேலை செய்யாது.
பிரைம் மட்டும் போதுமா?
ஜியோ பிரைம் திட்டத்திற்கு மட்டும் ரூ.99 செலுத்தியவர்களுக்கு 12 மாதங்களுக்கான பிரைம் திட்டம் மட்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும். ரூ.99 அல்லாமல் மற்ற ரீசார்ஜ் செய்யாமல் ஜியோ சேவைகளை பயன்படுத்த முடியாது. இதனால் குறைந்த பட்சம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.