ஆன்மிகம்

சரணடைந்தால் சங்கடங்களை தீர்க்கும் சரணாகரட்சகர் கோவில்

நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தில்லையாடி. இங்கே ஸ்ரீபெரியநாயகி சமேதராகக் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசரணாகரட்சகர்.

விக்ரம சோழனின் ஆட்சிக் காலம். அவனது மந்திரிகளில் ஒருவரான இளங்காரார். திருக்கடவூர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே நேரம், தில்லையாடி திருக்கோயிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்து கொண்டிருந்தார். அந்த மந்திரி சிறிது காலம் கழித்தே மன்னனுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. உடனே மந்திரியை அழைத்து தில்லையாடி கோவிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான். மந்திரி மறுத்தார்.

அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன். தன்னுடைய வாளால் மந்திரியின் கையை வெட்ட முயற்சித்தான். அப்போது பேரொளியுடன் அமைச்சருக்குக் காட்சி தந்தார் ஈஸ்வரன். ஆனால், அந்த திவ்விய தரிசனத்தைக் காண இயலாதவாறு மன்னணின் பார்வை பறிபோனது. தனது தவற்றை உணர்ந்த அரசன் கதறினான். இந்தக் தலத்துக்கு ஒடோடி வந்து, ஈஸ்வரனைச் சரண் அடைந்து, அவரை பூஜித்து வழிபட்டு, மீண்டும் பார்வை கிடைக்கப் பெற்றான்.

இதனால் இந்தக் தலத்தின் சிவனார். ஸ்ரீசரணாகரட்சகர் (சாந்தாரைக் காந்த ஸ்வாமி) என்று திருப்பெயர் பெற்றாராம். அற்புதமான இந்தக் கதையை விவரிக்கும் தலபுராணம் இந்த ஆலயத்தின் பழமை சுமார் 5000 வருடங்களுக்கு மேல் என்கிறது.சித்திரை வருடப்பிறப்பு துவங்கி மாதாந்திர விசேஷங்கள் அனைத்தும் இங்கே சிறப்புற நடைபெறுகின்றன.

ஆடிப்பூரத்தன்று சந்தானபரமேஸ்வரி ஹோமத்தில் கலந்து கொண்டு அம்பாளுக்கு வளையல் சார்த்தியும், அவளின் சன்னதியில் தொட்டில் கட்டியும் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அது போன்று புரட்டாசி நவராத்திரியின் போது அம்பாளுக்கு ராஜேஸ்வரி அலங்காரம் செய்து வழிபட, திருமணத் தடைகள் நீங்குமாம்.

சோமவார (திங்கட்கிழமைகளில்) நாளில் 108 சங்காபிஷேகம், கார்த்திகையில் முருகன் வீதியுலா, மார்கழி பஞ்சமூர்த்தி வீதியுலா, மாசி உற்சவம் ஆகிய வைபவங்களும் இங்கே விசேஷம்.

பங்குனி உத்திரத் திருநாளில்… 21 தட்டுகளில் பூ பழம், சேலை – வேட்டி என வரிசை வைத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடைபெறும். திருக்கல்யாணத்தைக் காணக் கண்ணிரண்டு போதாது. மணப்பேறு வாய்க்கவும், மாங்கல்ய பலம் சித்திக்கவும் அவசியம் தரிசிக்க வேண்டிய வைபவம் இது.

கோவில் முகவரி :

அருள்மிரு சரணாகரட்சகர் திருக்கோவில்
திருக்கடையூர்,
தில்லையாடி,
நாகப்பட்டிணம்.