ஆன்மிகம்

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நாளை நடக்கிறது

 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குரும்பூர் அருகே உள்ள மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவில் அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

6-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) காலையில் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

10-ம் திருநாளான 9-ந் தேதி காலையில் சிறப்பு ஹோமம், அபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 1 மணிக்கு அய்யனார் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி, மேல புதுக்குடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.