Gangubai Hangal's felicitation at Kala Academy, Panjim
Life History இசைக்கலைஞர்கள்

கங்குபாய் ஹங்கல்

கங்குபாய் ஹங்கல்’ என்பவர் இந்துஸ்தானி இசை உலகின் மிக பிரபலமானவர்களுள் ஒருவராவார். கர்நாடக இசை வல்லுனரான ஒரு தாய்க்கு பிறந்த கங்குபாய் ஹங்கல் அவர்களின் பாடும் திறன், அவரது மரபணுக்களில் ஏற்கனவே இருந்தது எனலாம். ஆத்மார்த்தமான, சக்தி வாய்ந்த பண்புகளைக் கொண்டு, கங்குபாய் ஹங்கல் அவர்களின் குரலை அடையாளம் காணலாம். அவர் ‘கிரானா காரனா’ என்னும் கரானாவை சேர்ந்தவர் மற்றும் 1930 களின் ஆரம்பத்தில், சிறந்த படைப்பாற்றல் மிக்க இந்துஸ்தானி காயல் கரானாக்களில் ஒன்றான காயல் வகையில் பயிற்சி மேற்கொண்டார். மிகச் சிறிய வயதிலேயே அவர் பள்ளியை விட்டு விலகினாலும், பாரம்பரிய இசையில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களிடமிருந்து இசைக் கற்று, இசை கல்வியில் புலமைப் பெற்று விளங்கினார். இசைத்துறையில் அவருக்குள்ள திறமைகளையும், சாதனைகளையும் கௌரவிக்கும் ‘இசை பேராசிரியர்’ பதவியையும் கர்நாடகா பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றார். இத்தகைய சிறப்புமிக்க இந்துஸ்தானி இசைப் பாடகரான கங்குபாய் ஹங்கல் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: மார்ச் 5, 1913

பிறந்த இடம்: தர்வத், கர்நாடகா, இந்தியா

இறப்பு: ஜூலை 21, 2009

தொழில்: இந்துஸ்தானி இசை பாடகி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

கங்குபாய் ஹங்கல் அவர்கள், இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தர்வத் நகரில் மார்ச் 5, 1913 அன்று பிறந்தார். அவரது தந்தை, சிக்குராவ் நாடிகர் தொழில்ரீதியாக ஒரு விவசாயி ஆவார், மேலும் அவரது தாயார் அம்பாபாய் ஒரு  கர்நாடக இசைப் பாடகியாக இருந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

தனது பள்ளிப்படிப்பை சிறு வயதிலேயே முடித்துக்கொண்ட கங்குபாய் ஹங்கல் அவர்கள், ஆரம்ப கல்வி மட்டுமே கற்றிருந்தார். 1928ல், அவரது தொடக்கக் கல்வியை முடித்த பின்னர், அவரது குடும்பம் ஹூப்ளி நகருக்கு குடிபெயர்ந்தது, மேலும் அங்கு அவர் தீவிரமாக ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை பாடங்களைக் கற்கத் தொடங்கினார்.

இசைப் பயிற்சி

ஹங்கல் அவர்களுக்கு பதிமூன்று வயதிருக்கும் போது, அவரது முதலாவது, முறையான இந்துஸ்தானி பாரம்பரிய இசைப் பாடத்தை ‘கிருஷ்ணா ஆச்சார்யா இசை அகாடமியில்’ மேற்கொண்டார். அவர் ஹூப்ளி வந்த பிறகு, தத்தோபன்ட் தேசாய் அவரது இசை ஆசிரியர்களுள் ஒருவராக இருந்தாலும், இந்துஸ்தானி பாரம்பரிய இசைத் துறையில் அவரது உண்மையான குருவாக கருதியது ‘சவாய் கந்தர்வா’ என்பவரைத் தான். ஹங்கல் அவர்களின் குடும்பம் ஹூப்ளிக்கு வந்த போது, சவாய் கந்தர்வா அவர்கள் அங்கு வசிக்கவிட்டாலும், அவர் ஹூப்ளிக்கு வரும் போதெல்லாம் அவரிடம் இசைப் பயிற்சி மேற்கொண்டார். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர், சவாய் கந்தர்வா ஹூப்ளி நகருக்குக் குடிபெயர்ந்ததால்,  கங்குபாய் ஹங்கல் அவரது குருவான அவரிடம், மூன்று ஆண்டுகளுக்கான ஒரு இசைப் பயிற்சியை மேற்கொண்டார். ஹங்கல் அவர்களின் குழந்தைப் பருவம் இனிமையானதாகவும், பாரம்பரியமிக்கதாகவும் இல்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன. அவர் ஒரு வேசி குடும்பத்தில் இருந்து வந்ததால், சமுதாயத்தில் மற்ற குழந்தைகள் அவரை பெரும்பாலும் அவமானப்படுத்தினார்கள். இதே எண்ணம், அவர் வளர்ந்து, இசைத்துறையை தனது தொழிலாக தேர்ந்தெடுத்த போதும் கூட, பலரது மனதிலும் நீடித்திருந்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், ஹங்கல் அவர்கள் ஹூப்ளிக்கு இடம்பெயர்ந்ததை அடுத்து, ஹூப்ளிவாசியான குருராவ் கால்கி என்ற ஒரு பிராமண வழக்கறிஞரைத் திருமணம் செய்தார். குழந்தைத் திருமணங்கள், சமுதாயத்தில் பொதுவானதாக மட்டுமல்லாமல், கட்டாயமானதாகவும் இருந்து வந்ததன் விளைவாக, அவருக்கும் இளம் வயதிலேயே திருமணம் நடந்தது எனலாம். திருமண வாழ்க்கை அவரது இசைத்துறைக்கு முற்றுப்புள்ளி வைக்காததால், அவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு, பல விருதுகளும், அங்கீகாரங்களும் பெற்றார்.

இசைப் பயணம்

கங்குபாய் ஹங்கல் அவர்கள், கர்நாடகாவின் சிறிய நகரங்களில் வாழ்ந்ததால், அவர் பல மோசமான விளைவுகளை சந்தித்தார். அந்த காலக்கட்டத்தில் சமூகத்தில் ஆண்கள் ஆதிக்கத்தால், பெண்கள் அவர்களுடைய விருப்பப்படி எதையும் செய்வதற்கு உரிமை இல்லை, மீறி அவர்களது எண்ணப்படி நடந்து கொண்டால், அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிவிடுவார்கள். அதே நேரத்தில், கங்குபாய் ஹங்கல் அவர்கள், ஒரு பாடகியாக வேண்டும் என்று ஆசைக் கொண்டு அதில் உறுதியாகவும் இருந்தாலும், சமூகம் அவருக்குத் தடைகளை அளித்து, அவரது எண்ணத்தைத் தடுக்க எண்ணியது. எனினும், ஹங்கல் அவர்கள், எந்தவொரு அடக்குமுறைக்கும் அடங்கிவிடாமல், இந்துஸ்தானி இசைப் பாடகராக தன்னை நிலைநிறுத்த மிகக் கடுமையாகப் போராடினார். 1945 ஆம் ஆண்டு வரை, கங்குபாய் ஹங்கல் அவர்கள், இந்தியா முழுவதும் பல நகரங்களில் காயல், பஜனைகள் மற்றும் தும்ரிக்களைப் பொதுமக்கள் முன் பாடினார். அவரது குரல், வானொலி வலையமைப்பான ‘ஆல் இந்தியா ரேடியோவில்’ வழக்கமாக ஒளிபரப்பாகின. இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளில் கலந்து கொள்ள வழக்கமாக அவருக்கு அழைப்பு வந்தால், பாட வேண்டுமென்ற எண்ணம் ஹங்கல் அவர்களுக்கு எப்போதும் இருந்தது, அதிலும் குறிப்பாக மும்பையில் நடத்தப்படும் கணேஷுதவாஸ்  கொண்டாட்டங்களில் பாடுவதற்கு, அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். பல நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, கங்குபாய் ஹங்கல் அவர்கள் படிப்படியாக தனது விருப்பத்தை ராகங்களுக்கு மாற்றினார். 1945க்கு பிறகு, அவர் ராகங்களில் மட்டுமே நிகழ்ச்சிகள் அரங்கேற்ற வேண்டுமென்று வலியுறுத்தினார். அவர் கர்நாடக பல்கலைக்கழகத்தின் ‘கெளரவ இசைப் பேராசிரியராக’ நியமிக்கப்பட்ட பிறகும் கூட, பொது கச்சேரிகளிலும் தோன்றினார். அவரது மரணத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான், அவர் பாடுவதை முழுவதுமாக நிறுத்திக்கொண்டார்.

இல்லற வாழ்க்கை

1929ல், தனது பதினாறாவது வயதில், கங்குபாய் ஹங்கல் அவர்கள், திருமணம் செய்து கொண்டார். அவரது கணவரான குருராவ் கால்கிக்கும், அவருக்கும் இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அவர்களின் திருமண வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அவரது 20வது வயதில், அவரை அதிர்ச்சி நிலையில் விட்டு, அவரது கணவர் இறைவனடி சேர்ந்தார். தனது குழந்தைகளை வளர்க்க பணம் திரட்டும் விதமாக, கங்குபாய் அவர்கள், தனது நகைகள் மற்றும் பிற வீட்டுப் பொருள்களை விற்றார். அவரது மகளான கிருஷ்ணா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு,  2004 ஆம் ஆண்டில் இறந்தார். கங்குபாய் ஹங்கல் அவர்களும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் நோயாளியாக இருந்ததால், சிகிச்சை மேற்கொண்டு, வெற்றிகரமாக 2003 ஆம் ஆண்டில், அந்நோயிலிருந்து மீண்டு வந்தார்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

இந்துஸ்தானி இசையில், கங்குபாய் ஹங்கல் அவர்களின் பங்களிப்பையும், சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, இந்திய அரசும், கர்நாடக மாநில அரசும் பல்வேறு விருதுகளை அவரது நீண்ட இசைப் பயணத்தில் வாரி வழங்கின. கீழ் வருவன, அவர் வாங்கிய விருது பட்டியல்:

1962: கர்நாடக சங்கீத நிருத்யா அகாடமி விருது

1971: பத்ம பூஷன் விருது.

1973: சங்கீத நாடக அகாடமி விருது

1996: சங்கீத் நாடக அகாடமி விருது

1997: தீனநாத் பிரதிஷ்டான்

1998: மாணிக் ரத்தன்

2002: பத்ம விபூஷன் விருது

இறப்பு

கங்குபாய் ஹங்கல் அவர்கள், ஒரு கடுமையான மாரடைப்பால் ஜூலை 21, 2009 ஆம் ஆண்டு கர்நாடகாவிலுள்ள ஹூப்ளி நகரில் அவரது வீட்டில் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 96. ஒரு சில ஆண்டுகள் நோயால் அவதியுற்றார். ஜூலை 22 மற்றும் 23 ஆம் தேதிகளை கர்நாடக மாநில அரசாங்கம், துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களாக அறிவித்தது. அவருடைய சாதனைகளைக் கொண்டாடும் விதமாகவும், திறமைகளை மதிக்கும் விதமாகவும் தர்வத் ஆணையர், ஒரு மாநில இறுதி ஊர்வலத்தை ஹூப்ளியில் ஜூலை 22 ஆம் தேதி ஒருங்கிணைத்தார். தான் வாழ்ந்த சமூகத்தில் தனக்குண்டான முக்கிய கடமைகளையும், தனது வாழ்வில் முக்கிய பங்காற்றிய மனிதர்களையும், கங்குபாய் ஹங்கல் அவர்கள், ஒரு போதும் மறந்ததில்லை. உறுப்பு நன்கொடை முக்கியத்துவத்தை, சமுதாயத்திற்கு கற்பிக்கும் விதமாக, அவரது மரணத்திற்கு முன்பு, அவர் தனது கண்களை தானம் செய்தார்.

காலவரிசை

1913 கங்குபாய் ஹங்கல் அவர்கள், மார்ச் 5 ம் தேதி பிறந்தார்.

1926: கிருஷ்ணா ஆச்சார்யா இசை அகாடமியில், இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் அவரது முதல் பாடத்திற்கான பயிற்சி மேற்கொண்டார்.

1928: அவரது குடும்பம் தர்வத்திலிருந்து ஹூப்ளி நகருக்கு இடம்பெயர்ந்தனர் .

1929: அவர் குருராவ் கால்கி என்ற வழக்கறிஞரை மணமுடித்தார்.

1933: அவரது கணவர், திருமணமான நான்கு ஆண்டுகள் கழித்து இறந்துவிட்டார்.

1945: காயல், பஜனைகள் மற்றும் தும்ரிக்களை பாடுவது தவிர்த்து, ராகங்களை மட்டுமே பாடத் தொடங்கினார்.

1962: ‘கர்நாடக சங்கீத நிருத்யா அகாடமி விருது’ பெற்றார்.

1971: இந்திய அரசாங்கம் ‘பத்ம பூஷண் விருதினை’ அவருக்கு அள்ளிக் கொடுத்தது.

1973: ‘சங்கீத நாடக அகாடமி விருது’ பெற்றார்.

1996: ‘சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப்’ வென்றார்.

1997: ‘தீனநாத் பிரதிஷ்டான்’ வழங்கப்பட்டது.

1998: ‘மாணிக் ரத்தன்’ பெற்றார்.

2002: ‘பத்ம விபூஷன் விருது’ பெற்றார்.

2006: பொது நிகழ்ச்சிகளில் பாடுவதை நிறுத்திக் கொண்டார்.

2009: கடுமையான மாரடைப்பால் ஜூலை 21 ஆம் தேதி இறந்தார்.