Life History தலைவர்கள்

மாயாவதி

மாயாவதி’ என்றழைக்கப்படும் ‘மாயாவதி நைனா குமாரி’, உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் இளம் பெண் முதலமைச்சரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.

மூன்று முறை உத்திரப்பிரதேச மாநில முதல்வராகப் பொறுப்பாற்றிய இவர், 2008இல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இவருடைய பெயரும் இடம் பெற்றது. இந்தியாவின் முதல் தலித் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்ற மாயாவதியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜனவரி 15, 1956

இடம்: புது தில்லி, இந்தியா

பணி: அரசியல் தலைவர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

மாயாவதி அவர்கள், 1956 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15  ஆம் நாள் இந்தியாவின் புது தில்லி மாநிலத்தில் பிரபு தாசுக்கும், ராம் ராதிக்கும் இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்தார். இவருக்கு ஆறு சகோதரர்கள் உள்ளனர். இவருடைய தந்தை ஒரு தகவல் தொடர்பு பணியாளராக பதல்பூரிலுள்ள கௌதம புத்தா நகரில் வேலைப்பார்த்து வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஆரம்ப கல்வியை அரசு பள்ளயில் தொடங்கிய அவர், 1975ல் இளங்கலைப் பட்டப்படிப்பையும், 1976ல் பி.எட் பட்டப்படிப்பையும் முடித்தார். 1983 ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து எல்.எல்.பி பட்டம் பெற்றார். பிறகு, ஆசிரியர் பணியை தொடர்ந்த அவர் “இந்தியன் அட்மினிஸ்ட்ரேஷன் சர்வீஸ் தேர்வுக்கும்” படித்துவந்தார். 1977 ஆம் ஆண்டு “பகுஜன் சமாஜ் கட்சியின்” நிறுவனர் கன்சிராமுடன் ஏற்பட்ட சந்திப்பு, அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம்.

அரசியல் வாழ்க்கை

1984 ஆம் ஆண்டு, பி.ஆர் அம்பேத்கார் கொள்கையை அடிப்படியாக கொண்டு கன்சிராம் அவர்கள் “பகுஜன் சமாஜ் கட்சியினை” துவங்கினார். சிறுவயதிலேயே அவரின் ஆவேசப் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்ட கன்சிராம் அவர்கள், மாயாவதியை கட்சியில் இணைத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், இக்கட்சியினை ஆதிதிராவிடர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான கட்சி எனவும் கன்சிராம் அறிவித்தார். கட்சிக்காக ஆசிரியர் பணியை துறந்த அவர், முழு நேர கட்சி உறுப்பினராகவும் ஆனார். பிறகு கன்சிராமின் வழிகாட்டலில் தீவிராமாக அரசியலில் ஈடுபட்டார். 1984 ஆம் ஆண்டு, தன்னுடைய முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர், கட்சி மேடைகளில் ஆற்றிய ஆவேசப் உரை, ஆதிதிராவிடர் மக்களை மட்டுமல்லாமல், மற்றவர்களையும் கவர்ந்தது. 1985 மற்றும் 1987 ஆண்டுகளில் பிஜ்னோர் மற்றும் ஹரித்வாரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டு முறை தோல்வியை தழுவிய போதிலும், 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பிஜ்னோர் பொதுதேர்தலில் வெற்றிபெற்றார்.

உத்திரபிரதேச முதல்வராக

தன்னுடைய அரசியல் வாழ்க்கையில், முழு கவனத்தையும் செலுத்திய இவர், 1995 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலத்தின் இளம் பெண் முதல்வராக பொறுப்பை ஏற்றார். பிறகு 2001 ஆம் ஆண்டு “பகுஜன் சமாஜ் கட்சியினை” தலைவர் பொறுப்பையும் ஏற்றார். இதுமட்டுமல்லாமல், இந்தியாவிலேயே குறைந்த வயதில் (39  வயது)  முதல்வரானவர் என்ற பெருமையும் பெற்றார். ஆனால் சில மாதங்களிலேயே இவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இருந்தாலும் 2002ல் மீண்டும் முதல்வராக தேர்தெடுக்கப்பட்ட அவர், 2003 வரை பணியாற்றினார்..

2002 ஆம் ஆண்டுக்கு பிறகு, பலபிரச்சனைகளை சந்தித்தபோதிலும், (வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு) 2007 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 206 தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் உத்திர பிரதேச மாநில முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்டார். அம்பேத்கர், பூலே மற்றும் கன்சிராம் போன்ற தலித் தலைவர்களுக்கு சிலைகளும், நினைவுசின்னங்களும் எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அவருடைய சிலையையும் அவரே திறந்து வைத்தார். இதைத் தவிர, அவருடைய கட்சியின் அடையாளத்தைக் குறிக்கும் யானை சின்னத்தை மாநிலம் முழுவதும் வைத்தார்.

குற்றச்சாட்டுகள்

முதல்வராக பதவியேற்ற பிறகு, மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை செய்யாமல், வெறும் சிலைகளையும், பூங்காக்களையும் நிறுவி அரசு பணத்தினை சுயநலமாக பயன்டுத்திவருகிறார் என பல குற்றச்சாட்டுகள் அவர்மேல் பதிவு செய்யப்பட்டுள்ளன. “சமாஜ்வாடி கட்சி தலைவர்” முலாயம்சிங் யாதவ், இவரை  உலகின் மிகப்பெரிய ஊழல்வாதி’ என நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கையும் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. லக்னோவில் மட்டும் சுமார் 60 யானை சிலைகளையும், நொய்டாவில் 30 யானை சிலைகளையும் நிறுவி அரசு பணத்தை சட்ட விரோதமாக செலவு செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தன்னுடைய வாழ்க்கையை பள்ளி ஆசிரியராக தொடங்கி, மிகக் குறுகிய காலத்திற்குள், உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், மூன்று முறை முதல்வராகப் பணியாற்றியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி சாதனை படைத்த மாயாவதியின் அரசியல் பயணம் இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.

காலவரிசை

1956 – ஜனவரி மாதம் 15  ஆம் நாள் புது தில்லியில் பிறந்தார்.

1977 – ஆசிரியர் பணியை தொடர்ந்தார்.

1984 – ஆசிரியர் பணியை துறந்து “பகுஜன் சமாஜ் கட்சியில்” உறுப்பினராக சேர்ந்தார்.

1989 – மக்களவை தேர்தலில் 13 தொகுதிகளில் வெற்றி.

1995 – உந்திரபிரதேச முதல்வராக தேர்தெடுக்கப்பட்டார்.

1997 – மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

2001 – “பகுஜன் சமாஜ் கட்சியினை” தலைவர் பொறுப்பையும் ஏற்றார்.

2002 – முதல்வராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

2007 – உந்திரபிரதேச முதல்வராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்டார்