Life History திரைப்பட பிரமுகர்

வாலி

கவிஞர் வாலி அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ‘கவிஞர்’, ‘பாடலாசிரியர்’ மற்றும் ‘சிறந்த ஓவியரும்’ ஆவார்.

கருத்தாழமிக்க எளியத் தமிழ் சொற்களைப் பாடல்களில் அமைத்து, எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தன் மனதில் பட்டதைக், கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அற்புதக் கவிஞர். தத்துவப் பாடல்களாக இருந்தாலும் சரி, விழிப்புணர்ச்சிப் பாடல்களாக இருந்தாலும் சரி, கவித்துவமானப் பாடல்களாக இருந்தாலும் சரி, காட்சிக்கேற்ப பாடல் வரிகளை எழுதி, தமிழ் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். எதுகை மோனையுடன் பாடல் வரிகளை எழுதுவதில் இவரை வெல்ல எவரும் இல்லையென்றே கூறலாம். சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டத் திரைப்படப்பாடல்களை எழுதியுள்ள இவர், ‘பொய்கால் குதிரை’, ‘சத்யா’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘ஹே ராம்’ போன்ற திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இவர் எழுதிய ‘பாண்டவர் பூமி’, ‘கிருஷ்ணா விஜயம்’ போன்ற கவிதைத்தொகுப்புகள் புகழ்பெற்ற படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. ஸ்ரீரங்கத்தில் பிறந்து, எழுத்துலகில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்த கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு மற்றும் கவிதைப் படைப்புகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: அக்டோபர் 29, 1931

இடம்: ஸ்ரீரங்கம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் மற்றும் நடிகர்

இறப்பு: ஜூலை 18, 2013

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 

‘டி. எஸ் ரங்கராஜன்’ என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வாலி அவர்கள், 1931  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டதிலுள்ள “ஸ்ரீரங்கம்” என்ற இடத்தில் ‘ஸ்ரீனிவாசன் ஐயங்காருக்கும்’, ‘பொன்னம்மாள்’ என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுடைய சொந்த ஊர் திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறை ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சிறுவயதிலேயே ஒரு சிறந்த ஓவியனாகவும், கவிஞனாகவும் தன்னை வெளிப்படுத்திய வாலி அவர்கள், வெற்றிகரமாகத் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், சென்னை ஓவியக்கல்லூரியில் சேர்ந்து, ஓராண்டு ஓவியக்கலை பயின்றார். அதன் பிறகு, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து “நேதாஜி” என்னும் கையெழுத்து பத்திரிக்கையை தொடங்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ‘கல்கி’ ஆவார். பின்னர், திருச்சி வானொலிக்கு ‘கதைகள்’, ‘நாடகங்கள்’ எழுதிக்கொடுக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

திரைத்துறையில் பாடலாசிரியராகப் பயணம்

ஸ்ரீரங்கத்தில் ‘பத்திரிக்கை பணி’, ‘கவிதைகள் எழுதுவது’, ‘ஓவியங்கள் வரைவது’, ‘வானொலிக்கு கதைகள் மற்றும் நாடகங்கள் எழுதுவது’ என நகர்ந்து கொண்டிருந்தது கவிஞர் வாலி அவர்களின் ஆரம்ப வாழ்க்கை. அதன் பிறகு, தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்று விளங்கிய ‘டி. எம். சௌந்தரராஜன்’ அவர்களால், சினிமாவிற்கு பாட்டெழுத சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். 1958 ஆம் ஆண்டு “அழகர் மலைக் கள்ளன்” என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். இத்திரைபடத்தில் வாலியின் முதல் பாடலை ‘பி. சுசிலா’ அவர்கள் பாடியிருப்பார். பின்னர், தொடர்ந்து ‘சந்திரகாந்த்’, ‘இதயத்தில் நீ’, ‘நல்லவன் வாழ்வான்’, ‘எதையும் தாங்கும் இதயம்’ போன்றத் திரைப்படங்களில் பாடல்களை எழுதியிருந்தாலும், 1963 ஆம் ஆண்டு “கற்பகம்” என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய பாடல்கள் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் ஒலித்த ‘மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா’, ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு’, ‘அத்தை மடி மெத்தையடி’ போன்ற பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே கைத்தட்டல்களைப் பெற்றுத்தந்தது.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பலவிதமான பாடல்களை எழுதிய வாலி அவர்கள், தான் குடித்த காவிரி ஆற்றுத் தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் கவிதை வடிவில் பாடல்களாக வெளிபடுத்தினார். பக்தி, நட்பு, காதல், தத்துவம், என அனைத்து விதப் பரிமாணங்களிலும் பாடல்களை எழுதி எல்லா தலைமுறையினருக்கும் ஏற்ற பாடலாசிரியராக புகழ்பெற்றார். கடமை பற்றி இவர் எழுதிய ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘நான் ஆணையிட்டால்’ போன்ற பாடல்களும், ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’, ‘ஓராறு முகமும் ஈராறு கரமும்’, ‘ராம நாமம் ஒரு வேதமேம்’ போன்ற பக்திப் பாடல்களும், நட்பைப் பற்றி வெளிபடுத்தும் ‘முஸ்தபா முஸ்தபா’, ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ளே’ போன்ற பாடல்களும், ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையா’, ‘தாயில்லாமல் நானில்லை’, ‘அம்மா அம்மா எந்தன் ஆருயிரே’, ‘நானாக நானில்லை தாயே’, ‘சின்னத்தாயவள் தந்த ராசாவே’, ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்’, ‘காலையில் தினமும் கண்விழித்தால்’ என அம்மாவைப் பற்றி இவர் எழுதிய அனைத்து பாடல்களும் கேட்பவர் மனதில் ஒரு வித உன்னதமான உணர்வை ஏற்படுத்தும் அற்புதப் பாடல்களாக அமைந்தன. சொற்கோர்வை, சந்தம், கருத்து, என அனைத்துமே அவரின் கற்பனையில் சொற்களாய் கவிதை வடிவில் உதிர்ந்தன. எத்தனை எத்தனை பாடல்கள், அதில் எத்தனை எத்தனை ராகங்கள் என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதுமட்டுமல்ல ‘காதல் வெப்சைட் ஒன்று’, ‘வைகாசி நிலவே’, ‘பூங்கொடி தான் பூத்ததம்மா’, ‘மலையோரம் வீசும் காற்று’, ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, ‘நிலாவே வா செல்லாதே வா’, ‘முன்பே வா என் அன்பே வா’, ‘என்ன விலை அழகே’ போன்ற பாடல்களில் தொடங்கி ‘சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது’ போன்ற வித்தியாசமான பாடல்களையும் எழுதி, இன்றைய சமூகத்தினருக்கும் ஏற்ற பாடலாசிரியராக முத்திரைப் பதித்தார். இன்னும் சொல்லப்போனால் அன்று ‘எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு’ எழுதினார், பிறகு ‘கமல் – ரஜினிக்கு’ எழுதினார், அதன்பிறகு ‘விஜய் – அஜித்துக்கு’ எழுதினார் இன்று ‘தனுஷ் – சிம்பு’ என நான்கு தலைமுறையையும் கடந்து பாடல்களை எழுதி உண்மை நாயகனாக விளங்குகிறார்.

கவிஞர் வாலி எழுதிய சில பாடல்கள்

‘தரைமேல் பிறக்க வைத்தார்’, ‘ஆண்டவனே உன் பாதங்களில்’, ‘தொட்டால் பூ மலரும்’, ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’, ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தார்’, ‘கண்போன போக்கிலே கால் போகலாமா’, ‘எனக்கொரு மகன் பிறப்பான்’, ‘காத்திருந்த கண்களே’, ‘மாலையில் சந்தித்தேன்’, ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’, ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’, ‘குங்குமப் பொட்டின் மங்களம்’, ‘துள்ளுவதோ இளமை’, ‘சிரித்து வாழவேண்டும்’ என இதுபோல் இன்னும் எத்தனையோ பாடல்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

கண்ணதாசன் இறந்தபொழுது வாலி எழுதிய கண்ணீர் துளிகள்

“எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன்.
ஒரு அழகியகவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்.”

கவிஞர் வாலி எழுதிய ஒரு சில திரைப்படங்கள்

‘சந்தரகாந்த்’, ‘இதயத்தில் நீ’, ‘எதையும் தாங்கும் இதயம்’, ‘படகோட்டி’, ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘அன்பே வா’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மோட்டார் சுந்தரம்’, ‘காவல்காரன்’, ‘ஒலி விளக்கு’, ‘குடியிருந்த கோயில்’, ‘அடிமைப்பெண்’, ‘இருகோடுகள்’, ‘எங்கள் தங்கம்’, ‘குமரிக்கோட்டம்’, ‘நீரும் நெருப்பும்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘பாரத விலாஸ்’, ‘நேற்று இன்று நாளை’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘அன்னை ஒரு ஆலயம்’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘மூன்று முகம்’, ‘தூறல் நின்னுப் போச்சு’, ‘வாழ்வே மாயம்’, ‘எங்கேயோ கேட்டக் குரல்’, ‘அடுத்த வாரிசு’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘தாய் வீடு’, ‘விதி’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘மங்கம்மா சபதம்’, ‘படிக்காதவன்’, ‘நான் சிவப்பு மனிதன்’, ‘மௌன ராகம்’, ‘ஊர்காவலன்’, ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘ராஜநடை’, ‘வருஷம் 16’, ‘சிவா, நடிகன்’, ‘அஞ்சலி’, ‘கிழக்கு வாசல்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘நாடோடி பாட்டுக்காரன்’, ‘தேவர் மகன்’, ‘உழைப்பாளி’, ‘எஜமான்’, ‘காதலன்’, ‘ராஜாவின் பார்வையிலே’, ‘இந்தியன்’, ‘காதலர் தினம்’, ‘ஹே ராம்’, ‘பிரியமானவளே’, ‘மின்னலே’, ‘மௌனம் பேசியதே’, ‘கஜினி’, ‘சந்திரமுகி’, ‘வல்லவன்’, ‘சிவாஜி’, ‘சென்னை 600028’,  ‘தசாவதாரம்’, ‘நாடோடிகள்’, ‘நான் கடவுள்’, ‘ஆதவன்’, ‘கோவா’, ‘அயன்’, ‘மங்காத்தா’, ‘எதிர்நீச்சல்’ போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார்.

பிறப் படைப்புகள்

‘அவதாரப் புருஷன்’, ‘அம்மா’, ‘பொய்க்கால் குதிரைகள்’, ‘ராமானுஜ காவியம்’, ‘நிஜ கோவிந்தம்’, ‘கலைஞர் காவியம்’, ‘பாண்டவர் பூமி’, ‘கிருஷ்ண விஜயம்’, ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். மேலும் ‘கலியுகக் கண்ணன்’, ‘காரோட்டிக் கண்ணன்’, ‘ஒரு செடியில் இரு மலர்கள்’ என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை-வசனம் எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ‘பொய்கால் குதிரை’, ‘சத்யா’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘ஹே ராம்’ என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விருதுகளும், மரியாதைகளும்

  • 2007 – இந்திய அரசால் “பத்ம ஸ்ரீ” விருது.
  • 1973 – ‘பாரத விலாஸ்’ திரைப்படத்தில் “இந்திய நாடு என் நாடு” என்ற பாடலுக்காக “தேசிய விருதை” வென்றுள்ளார்.
  • 1970- ல் ‘எங்கள் தங்கம்’, 1979-ல் ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’, 1989-ல் ‘வருஷம் பதினாறு’ மற்றும் ‘அபூர்வ சகோதரர்கள்’, 1990-ல் ‘கேளடி கண்மணி’, 2008-ல் ‘தசாவதாரம்’ போன்றத் திரைப்படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான “தமிழ்நாடு அரசு மாநில விருது” வழங்கப்பட்டது.

திரைப்படங்களுக்கு பாடல் எழுத வயது ஒரு தடை இல்லை என்பதை நிருபித்து, எழுத்துலகில் ‘மார்கண்டேயக் கவிஞர்’ என அனைவராலும் புகழப்படும் கவிஞர் வாலி அவர்கள், தன்னுடைய பாடல் வரிகளால் கவிஞர்களை மட்டுமல்லாமல், பாமர மக்களையும் தலையசைக்க வைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இன்னும் சொல்லப்போனால், இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் இவர் நடையைப் பின்பற்றியே பாட்டெழுதி கொண்டிருக்கின்றனர். ‘கவிப்பேரரசு கண்ணதாசனுக்கு’ பிறகு திரையுலகம் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது இவரின் காலங்களில்தான் என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது.