Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ராணுவ ஜீப்பில் இளைஞரை கட்டி வைத்த விவகாரம்: வீடியோவை ஆய்வு செய்து விசாரிக்கிறது ராணுவம்

Advertisements

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் வாக்குச்சாவடிகளை குறிவைத்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர், வன்முறையின் போது பாதுகாப்பு படை கொடுத்த பதிலடியில் 8 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகரில் கரல்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரை போராட்டக்காரர்கள் ஓட, ஓட விரட்டி கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீரில் போராட்டக்காரர் ஒருவர் ராணுவ ஜீப்பின் முன்பகுதியில் கட்டிவைக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாக்கும் முயற்சியாக, மனித கேடயமாக அவர் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் நடைபெற்ற போது தேர்தல் பணியாளர்களை பத்திரமாக அழைத்து செல்ல வேண்டும் என்ற நிலையில் ஒருவர் ஜீப்பின் முன்னதாக கட்டிவைக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் துன்புறுத்தப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்ததாக ஒரு தகவலில் குறிப்பிட்டு உள்ளது.

மனித கேடயமாக ராணுவ ஜீப்பில் வாலிபரை கட்டி வைத்தது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. வீடியோவின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்து வருவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Exit mobile version