Technology

இப்படியும் வினோதம்: கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த ஓவியர்

 பாரீஸ்:

பிரான்சை சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் (44). இவர் அதிசய நிகழ்வுகள் செய்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு முன்பு கரடி பொம்மைக்குள் நீண்ட நேரம் அடைந்து கிடந்து சாதனை படைத்தார். 12 டன் எடையுள்ள சுண்ணாம்பு பாறைக்குள் ஒருவாரம் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் அவர் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் முயற்சியை மேற்கொண்டார். பொதுவாக முட்டைகளின் மீது கோழி அமர்ந்து சூடுபடுத்தி குஞ்சு பொறிக்க செய்யும் அல்லது ‘இன்குபேட்டர்’ கருவி மூலம் குஞ்சுகள் பொறிக்க வைக்கப்படுகிறது. ஆனால் அவர் விசே‌ஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியின் கீழே 10 முட்டைகளை வைத்து அதன் மீது அமர்ந்தார்.


முட்டையில் இருந்து வெளியான கோழிக்குஞ்சை படத்தில் காணலாம்.

கடந்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி அடைக்காக்க தொடங்கினார். இந்த நிலையில் 22 நாட்கள் கடந்த பின் நேற்று முன்தினம் அடைகாத்த முட்டைகளில் இருந்து 4 குஞ்சுகள் பொறித்து வெளிவந்தன.

இந்த வினோத நிகழ்ச்சியின் மூலம் இவர் சாதனை படைத்துள்ளார். இவர் முட்டைகளை அடைகாக்க தொடங்கிய நாளில் இருந்து 24 மணி நேரத்தில் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே நாற்காலியில் இருந்து எழுந்தார். முட்டைகளுக்கு குறைந்தது. 37 டிகிரி வெப்பம் கொடுத்தார்.