Technology

மலிவு விலையில் வை-பை பேக், விரைவில் மளிகை கடையிலும் வாங்கலாம்

புதுடெல்லி:
மத்திய டெலிமாட்டிக்ஸ் வளர்ச்சி அமைப்பு உருவாக்கியுள்ள புதிய திட்டத்தின் கீழ் சில்லறை வணிகர்கள் மூலம் பொது மக்கள் வை-பை டேட்டா பேக்களை மலிவு விலையில் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தரவு அலுவலகம் (public data office) மூலம் குறைந்தபட்சம் ரூ.10 என்ற விலையில் வை-பை டேட்டா பெற முடியும்.
இந்த சேவையை மளிகை கடை உட்பட அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் வழங்க முடியும்.வை-பை சேவைகளை அனைவருக்கும் வழங்கும் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ரூபாய்க்கு வழங்க முடியும். மேலும் இந்த சேவையை வழங்க எவ்வித உரிமமும் பெற வேண்டிய அவசியம் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய திட்டம் மூலம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இணைய வசதி மலிவு விலையில் வழங்க முடியும். விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த திட்டத்தில் வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்கள் மூலம் e-KYC கொண்ட வை-பை இயக்க முடியும்.
இத்துடன் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இதன் கட்டண வழிமுறைகள் மின்சாதனம் மூலம் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.