political

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக த.மா.கா.வினர் இன்று முதல் பிரசாரம் செய்வார்கள் என வாசன் அறிவித்துள்ளார்.

சென்னை:

சென்னை ஆர்கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் தினகரனும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடுகிறார்.

தி.மு.க. தரப்பில் மருது கணேஷ் களத்தில் உள்ளார். இதுதவிர பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன், தே.மு.தி.க.வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதன் என முக்கிய வேட்பாளர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் தேர்தலில் தங்கள் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்ற ஜி.கே.வாசன், இந்த தேர்தலில் மதுசூதனனை தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரிப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை ஆதரித்து இன்று முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்வார்கள் என்று தெரிவித்தார். மேலும், நாளை மறுநாள் ஓ.பன்னீர்செல்வத்துடன சேர்ந்து பிரசாரம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.