political

அமைச்சர் விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் அதிர்ச்சி பேட்டி!

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, அவரது வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரம் தீவிரம் அடைந்துவந்தநிலையில், கடந்த 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீரெனச் சோதனை மேற்கொண்டனர். 20 மணி நேரத்துக்கு மேல் நடந்த சோதனை, அடுத்த நாள் அதிகாலையில் முடிவடைந்தது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து, வரும் 10-ம் தேதி (இன்று) விளக்கம் அளிக்க விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

அதன்படி, விஜயபாஸ்கர் தனது வழக்கறிஞர் ஐயப்பமணியுடன் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஐயப்பமணி, விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் போலியானவை. ஆவணங்கள் போலியானவை என நிரூபிப்போம் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்றுவிடுவோம் என்பதால், தேர்தலை ரத்துசெய்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.