political

ஆர்.கே. நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான்தான் வெற்றி பெறுவேன்: டி.டி.வி. தினகரன் சபதம்

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க அம்மா கட்சி வேட்பாளரும், அ.தி.மு.க துணை பொதுச்செயலாளருமான டி.டி.வி. தினகரன் அடையாறில் உள்ள வீட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலையாகும். எப்போது தேர்தலை நடத்தினாலும் நான் வெற்றி பெறுவது உறுதி. அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற சதி திட்டத்தில் தற்போது தேர்தலை முடக்கி இருக்கிறார்கள்.

ஏற்கனவே இரட்டை இலையை முடக்கினார்கள். 4 ஆண்டு கால ஆட்சி முழுமையாக நிறைவு பெறும். ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மறைந்த முதல்வர் அம்மா 57 ஆயிரம் கோரிக்கை மனுக்களை பெற்று இருந்தார். வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 57 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டித்தரப்படும்.

துரோகிகளாலும், எதிரிகளாலும் இந்த தேர்தல் முடக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு போலீஸ்படையும்,தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு இருந்த போதிலும் தேர்தலை ஏன் ரத்து செய்தார்கள்? இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதும் இரட்டை இலையை மீட்பதும் தான் எங்கள் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.