World

கனடாவில் குடிபோதையில் இருந்த விமானிக்கு 8 மாத ஜெயில்

கனடாவில் குடிபோதையில் இருந்த விமானிக்கு 8 மாதம் ஜெயில் தண்டனையும், ஒரு ஆண்டு விமானம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

டொரண்டோ:

ஸ்லோவாகியா நாட்டை சேர்ந்த விமானி மிரோஸ் லாவ் குரோயாச் (37). ஆங்கில புத்தாண்டு அன்று கனடாவில் கால்கரி விமான நிலையத்தில் விமானத்தில் அமர்ந்து அதை ஓட்ட தயாராக இருந்தார்.

அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். அவரால் உட்கார கூட முடியவில்லை. அதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அவரை விமானத்தில் இருந்து இறக்கி பரிசோதித்தனர்.

அப்போது அவர் மது குடித்து இருந்தது தெரிய வந்தது. மேலும், அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் ‘வோட்கா’ என்ற காலி மது பாட்டிலும் சிக்கியது.

எனவே கைது செய்யப்பட்ட அவர் மீது கனடா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இவர் குற்றவாளி என கடந்த மாதம் (மார்ச்) 21-ந்தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அவருக்கு 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஒரு ஆண்டு விமானம் ஓட்டவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர் ஓட்ட தயாராக இருந்த விமானம் கனடா கல்கரியில் இருந்து மெக்சிகோ கேன்கன் நகருக்கு செல்ல இருந்தது. அதில் 100 பயணிகள் இருந்தனர்.