political

திருமணம் செய்ய இளம்பெண்ணை காரில் கடத்தி செல்ல முயற்சி: நண்பர்களுடன் வாலிபர் கைது

புதுச்சேரி:

புதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதி நகரை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 22). பெயிண்டர் இவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு அந்த பெண்ணின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து இருந்த நிலையில் பின்னர் சிலம்பரசனின் நடவடிக்கையை பெண்ணின் பெற்றோர் கண்காணித்தனர்.

அப்போது சிலம்பரசனின் நடவடிக்கை சரியில்லாததால் சிலம்பரசனுக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.

ஆனால், சிலம்பரசன் அந்த பெண்ணை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். அந்த பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார்.

அதற்காக தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சொக்கநாதன் பேட்டையை சேர்ந்த தமிழ்மணி ஆகியோரின் உதவியை நாடினார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து சிலம்பரசன் கடந்த சில நாட்களாக அந்த பெண்ணை எங்கெங்கு செல்கிறார் என்பதை கண்காணித்து வந்தார்.

அதன்படி தினமும் வீட்டை விட்டு செல்வதை நோட்டமிட்ட சிலம்பரசன் அந்த பெண்ணின் தக்க சமயத்தை எதிர்பார்த்து கொண்டு இருந்தார்.

நேற்று மயிலம் செல்வதாக ஒரு காரை வாடகைக்கு பேசினார். கார் டிரைவர் கணேசனும் இதனை அறியாமல் காரை கொண்டு வந்தார்.

அந்த காரில் சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் ராஜேஷ், தமிழ்மணி ஆகியோர் ஏறிக்கொண்டனர். அங்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோரிமேடு செல்லும் ரோட்டில் வந்த போது, காரை திடீரென நிறுத்தும்படி டிரைவரிடம் அவர்கள் கூறினர். சிறுநீர் கழிக்க நிறுத்த சொல்கிறார்கள் என எண்ணி டிரைவர் கணேசன் காரை நிறுத்தினார்.

அப்போது அந்த பெண் வரவே சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் அந்த பெண்ணை குண்டுக் கட்டாக தூக்கி சென்று காரில் கடத்த முயன்றனர்.

உடனே அந்த பெண் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள் என அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

இந்த விபரீதத்தை புரிந்து கொண்ட கார் டிரைவர் கணேசன் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இதையடுத்து பெண்ணை கடத்த முயன்ற சிலம்பரசன் மற்றும்அவரது நண்பர்கள் ராஜேஷ், தமிழ்மணி ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்-இன்ஸ் பெக்டர் வெற்றிவேல் ஆகியோர் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.