முதல்வர் பதவி பறிபோனதால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் நாடகம் ஆடுகிறார் என தீபா ஆவேசமாக பேசியுள்ளார்.
சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவருமான ஜெ.தீபா நாகூரான் தோட்டம், புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வீதி வீதியாக சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜெயலலிதா என்னும் மாபெரும் தலைவர் போட்டியிட்டு வென்ற தொகுதி. இப்போது ஜெயலலிதா பெயரை சொல்லி அனுதாபம் தேட முயற்சிக்கிறார்கள். ஆர்.கே.நகர் மக்கள் ஏமாந்து விடக்கூடாது.
ஜெயலலிதா மரணம் அடைந்த போது எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் 4 மாதங்களாக ஓ.பன்னீர்செல்வமும், மதுசூதனனும் மவுனமாகத்தான் இருந்தார்கள்.
முதல்வர் பதவி பறிபோனதால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் நாடகம் ஆடுகிறார். மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதாவின் பெயரை நான் மட்டும்தான் உரிமை கொண்டாட முடியும்.

அவரது பெயரை சொல்லி ஓட்டு கேட்டு வருபவர்களை விரட்டி அடியுங்கள். ஜெயலலிதாவின் கனவுகளையும், சபதத்தையும் நிறைவேற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். மக்கள் நம்பிக்கைக்கு உரியவளாக, உரிமை உடையவளாக இருப்பேன்.
இந்த தொகுதியில் முதியோர் உதவித் தொகை பலருக்கு கிடைக்கவில்லை என்று புகார் கூறி உள்ளார்கள். அனைவருக்கும் முதியோர் பென்சன் கிடைக்க ஏற்பாடு செய்வேன்.
தொகுதியில் நடமாடும் மருத்துவ குழு ஏற்பாடு செய்வேன். எனது நம்பிக்கையை சாத்தியமாக்க இந்த இடைத்தேர்தலில் எனக்கு வாய்ப்பு தாருங்கள்.
இவ்வாறு ஜெ.தீபா பேசினார்.